மின்சாரம் தாக்கி வாழைக்காய் வியாபாரி பலி


மின்சாரம் தாக்கி வாழைக்காய் வியாபாரி பலி
x
தினத்தந்தி 20 Sep 2019 9:45 PM GMT (Updated: 20 Sep 2019 8:30 PM GMT)

மின்சாரம் தாக்கி வாழைக்காய் வியாபாரி பரிதாபமாக இறந்தார்.

ஜீயபுரம்,

திருச்சி மாவட்டம் குழுமணி அருகே உள்ள அயிலாப்பேட்டை மேலத்தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணியன்(வயது 48). இவருக்கு திருமணமாகி ஸ்ரீதேவி என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். வாழைக்காய் வியாபாரியான சுப்பிரமணியன், விவசாயிகளிடம் இருந்து வாழைக்காய்களை வாங்கி, கேரளா மற்றும் மும்பை போன்ற பகுதிகளுக்கு விற்பனை செய்து வந்தார்.

இவர் தன் வீட்டில் வளர்க்கும் ஆட்டை கட்டுவதற்காக, வீட்டின் பின் பகுதியில் புதிதாக கொட்டகை அமைத்து, மின் இணைப்பு கொடுத்திருந்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை மழை பெய்ததால், ஆட்டை கொட்டகையில் கட்டுவதற்காக இரும்பு கம்பியை பிடித்தபோது, இரும்பு கம்பியின் வழியாக மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார். சத்தம் கேட்டு அங்கு வந்தவர்கள், உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த சுப்பிரமணியனை மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள், ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக ஜீயபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story