சென்னை புறநகர் பகுதியில் அதிகாலை நேரத்தில் வீடு புகுந்து திருடும் கும்பல் கைது; கிராமமே கொள்ளையில் ஈடுபட்டது அம்பலம்


சென்னை புறநகர் பகுதியில் அதிகாலை நேரத்தில் வீடு புகுந்து திருடும் கும்பல் கைது; கிராமமே கொள்ளையில் ஈடுபட்டது அம்பலம்
x
தினத்தந்தி 20 Sep 2019 10:30 PM GMT (Updated: 20 Sep 2019 9:47 PM GMT)

சென்னை புறநகர் பகுதியில் தனியாக அறை எடுத்து தங்குபவர்களை குறிவைத்து அதிகாலையில் வீடு புகுந்து திருடும் கும்பலை போலீசார் கைது செய்தனர். கிராமமே சேர்ந்து கொள்ளையில் ஈடுபட்டது தெரிந்தது.

தாம்பரம்,

சென்னை கிண்டி, வேளச்சேரி, சேலையூர், சிட்லபாக்கம், தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் தனியாகவும், நண்பர்களுடனும் சேர்ந்து அறை எடுத்து தங்கி சென்னையில் வேலை பார்த்து வருபவர்களின் வீடுகளில் அதிகாலை நேரங்களில் மடிக்கணினி, விலைஉயர்ந்த செல்போன்கள் மற்றும் பணம் திருட்டு போய் வந்தது.

தாம்பரம் இரும்புலியூரில் நண்பர்களுடன் அறை எடுத்து தங்கிய கம்ப்யூட்டர் என்ஜினீயர் நிகாஸ் என்பவரது மடிக்கணினி, செல்போனும் திருடுபோனதாக அளித்த புகாரின்பேரில் தாம்பரம் போலீஸ் உதவி கமிஷனர் அசோகன் தலைமையில் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன், சப்-இன்ஸ்பெக்டர்கள் சேகர், கஜபதி மற்றும் போலீசார் தனிப்படை அமைத்து கொள்ளையர்களை தேடிவந்தனர்.

நிகாஸ் வீட்டில் திருடுபோன செல்போன் ஐ.எம்.இ. நம்பரை வைத்து அதை பயன்படுத்தியவரை பிடித்து விசாரித்தனர். அதில் திருட்டில் ஈடுபட்ட ஒருவரது செல்போன் எண் கிடைத்தது. அந்த செல்போன் சிக்னலை வைத்து கிண்டியில் உள்ள விடுதியில் தங்கி இருந்த வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு தாலுகா நய்யம்பட்டியை அடுத்த சங்கராபுரம் என்ற குக்கிராமத்தை சேர்ந்த சத்யராஜ்(22), ராமு(22), கார்த்திக்(26) உள்பட 4 பேரை கைது செய்தனர்.

குறிப்பிட்ட ஒரு பிரிவை சேர்ந்த இந்த கிராம மக்கள், கூட்டாக தமிழகம் முழுவதும் வேலைக்கு செல்வது போல் ஒவ்வொரு ஊராக சென்று ஓட்டல்களில் அறை எடுத்து தங்குவர். அதிகாலையில் அந்த பகுதியில் நோட்டமிடும் அவர்கள், வெளியில் கொடிகளில் காயபோடும் துணிகளை வைத்து தனியாக தங்கி இருப்பவர்களை கண்டுபிடித்து அந்த வீடுகளுக்குள் புகுந்து திருடுவது தெரிந்தது.

திருடிய பொருட்களை கும்பலில் உள்ள ஒருவரிடம் கொடுத்து கிராமத்திற்கு அனுப்பி விட்டு, அடுத்த இடத்தில் திருட்டை அரங்கேற்றுவார்கள் என்பது தெரிந்தது. கைதானவர்களிடம் இருந்து ரூ.5 லட்சம் மதிப்புள்ள மடிக்கணினிகள், 14 செல்போன்களை பறிமுதல் செய்தனர்.

Next Story