திருவள்ளூர் அருகே வங்கியில் போலி ஆவணங்கள் மூலம் ரூ.17 லட்சம் மோசடி - 10 பேர் கைது


திருவள்ளூர் அருகே வங்கியில் போலி ஆவணங்கள் மூலம் ரூ.17 லட்சம் மோசடி - 10 பேர் கைது
x
தினத்தந்தி 20 Sep 2019 11:00 PM GMT (Updated: 20 Sep 2019 10:05 PM GMT)

திருவள்ளூர் அருகே வங்கியில் போலி ஆவணங்கள் மூலம் ரூ.17 லட்சத்து 10 ஆயிரம் மோசடியில் ஈடுபட்டது தொடர்பாக 10 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருவள்ளூர்,

திருவள்ளூரை அடுத்த காக்களூர் சாலையில் சிறுகடன் வழங்கும் தனியார் வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில் மேலாளராக திருவள்ளூர் வி.எம்.நகரை சேர்ந்த மணிகண்டன் என்பவரும், உதவி மேலாளராக திருவள்ளூரை அடுத்த தொழுவூர் சபரிநகரை சேர்ந்த கார்த்திகேயன், வங்கி கடன் அதிகாரியாக திருவள்ளூரை அடுத்த கூடப்பாக்கம் காலனியை சேர்ந்த சதீஷ் ஆகியோர் பணிபுரிந்து வருகின்றனர். இந்த நிலையில் திருவள்ளூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த வாடிக்கையாளர்கள் தங்களுக்கு வங்கிக்கடன் வேண்டும் என இந்த வங்கியை அணுகி உள்ளனர்.

அவர்கள் கடன் பெறுவதற்காக கட்டிடம் இருப்பதாகவும், ஆவணங்கள் மற்றும் சொத்து வரி போன்றவற்றை போலியாக வழங்கி உள்ளனர். அதனை பெற்றுக்கொண்ட மேற்கண்ட 3 வங்கி அதிகாரிகளும் அந்த ஆவணங்கள் மீது உரிய விசாரணை செய்யாமலும், நேரடியாக சென்று தணிக்கை செய்யாமலும், 11 வாடிக்கையாளர்களுக்கு அவர்கள் போலியாக சமர்ப்பித்த ஆவணங்களை கொண்டு வங்கியில் இருந்து ரூ.17 லட்சத்து 10 ஆயிரத்தை கடனாக வழங்கி உள்ளனர்.

பணத்தை பெற்றுக்கொண்ட வாடிக்கையாளர்கள் மாத தவணைத்தொகையை முறையாக செலுத்தாமல் இருந்தனர். இதுபற்றி புகார்கள் வந்ததை தொடர்ந்து அந்த வங்கியின் தலைமை மேலாளரான வெற்றிவேல் வங்கிக்கு சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர்கள் போலி ஆவணங்களை சமர்ப்பித்து மோசடியில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து அவர் திருவள்ளூரில் உள்ள மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்தன் உத்தரவின்பேரில் மாவட்ட குற்றப்பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு கண்ணப்பன் தலைமையில் இன்ஸ்பெக்டர் ருக்மாங்கதன், சப்-இன்ஸ்பெக்டர்கள் மனோகரன், சுசீலா மற்றும் போலீசார் கடந்த 14-ந்தேதி தலைமறைவாக இருந்த வங்கியின் மேலாளர் மணிகண்டன், உதவி மேலாளர் கார்த்திகேயன், சதீஷ் ஆகியோரை கைது செய்தனர். கடன் பெற்று தலைமறைவாக இருந்த திருவள்ளூரை அடுத்த பெரியக்குப்பம் சித்திவிநாயகர் கோவில் தெருவை சேர்ந்த கிருஷ்ணன் (54), உதயகுமார் (27), திருவள்ளூரை அடுத்த பாண்டூர் பஜனை கோவில் தெருவை சேர்ந்த மோகன்ராவ் (47), சென்னை புத்தகரம் சூரப்பேட் 7-வது தெரு புருஷோத்தமன் நகரை சேர்ந்த சரவணன் (33), ஸ்ரீதர் (32), சென்னை புத்தகரம் சூரப்பேட் சுப்பன்நகரை சேர்ந்த நாகலட்சுமி (54), சுகுமாரன்(64) ஆகியோரை போலீசார் நேற்று கைது செய்து திருவள்ளூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி பின்னர் சிறையில் அடைத்தனர். மேலும், இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

Next Story