புதிதாக வீடுகள் கட்டித்தரக்கோரி; வைரபுரி பொதுமக்கள் ஊர்வலமாக வந்து கோட்டாட்சியரிடம் மனு


புதிதாக வீடுகள் கட்டித்தரக்கோரி; வைரபுரி பொதுமக்கள் ஊர்வலமாக வந்து கோட்டாட்சியரிடம் மனு
x
தினத்தந்தி 20 Sep 2019 10:30 PM GMT (Updated: 20 Sep 2019 10:12 PM GMT)

புதிதாக வீடுகள் கட்டித்தரக்கோரி வைரபுரி பொதுமக்கள் ஊர்வலமாக வந்து குளித்தலை கோட்டாட்சியரிடம் மனு கொடுத்தனர்.

குளித்தலை, 

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே உள்ள இனுங்கூர் ஊராட்சிக்குட்பட்ட வைரபுரியைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் நேற்று குளித்தலை பஸ்நிலையத்தில் இருந்து ஊர்வலமாக வந்தனர். பின்னர் குளித்தலை கோட்டாட்சியர் (பொறுப்பு) கணேசிடம் கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:

இனுங்கூர் ஊராட்சிக்குட்பட்ட வைரபுரி பகுதியில் அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்த 50 -க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறோம். தங்களுக்கு 1982-ம் ஆண்டு தொண்டு நிறுவனம் ஒன்றின் மூலம் கட்டிக்கொடுக்கப்பட்ட வீடுகளில் வசித்து வருகிறோம். இந்த வீடுகள் கட்டப்பட்டு 35 ஆண்டுகளுக்கு மேல் ஆனதால் தற்போது இந்த வீடுகளின் சுவர்களில் விரிசல் ஏற்பட்டு, மேற்கூரை சிமெண்டு பூச்சுகள் இடிந்து விழுந்து மிகவும் பழுதடைந்துள்ளது.

பழுதடைந்த இந்த வீடுகளில் குடியிருக்க முடியவில்லை. இதனால் இரவு நேரங்களில் வீட்டினுள் தூங்கமுடியாமல், குழந்தைகள் மற்றும் முதியவர்கள் முதல் அனைவரும் வீதியில் படுத்து உறங்கி வருகிறோம். நாங்கள் அனைவரும் விவசாய கூலி தொழில்செய்து வாழ்க்கை நடத்தி வருகிறோம். தங்களால் சொந்தமாக செலவு செய்து வீடுகள் கட்டமுடியாத நிலை உள்ளது. பழுதடைந்துள்ள வீடுகளை இடிந்துவிட்டு புதிய வீடுகள் கட்டித்தரக்கோரி பல முறை மனு அளித்தும் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

தாங்கள் அருந்ததியர் சமூகத்தினர் என்பதாலோ எங்கள் கோரிக்கை தொடர்ந்து நிராகரிக்கப்படுகிறது. தினசரி அச்சத்தோடும், உயிருக்கு பயந்தும் தாங்கள் வாழ்ந்துவரும் பழுதடைந்துள்ள வீடுகளை கோட்டாட்சியர் நேரில் பார்வையிடவேண்டும். மேலும் அரசு நிதி ஒதுக்கீடு செய்து தங்களுக்கு புதிய வீடுகள் கட்டித்தர நடவடிக்கை எடுக்கவேண்டுமென அந்த மனுவில் கூறியுள்ளனர். இதேபோல குளித்தலை வட்டாட்சியர் மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும் மனு அளித்துள்ளனர்.

Next Story