மணப்பாறை அருகே குழாயில் உடைப்பு 30 அடி உயரத்திற்கு பீரிட்டு வெளியேறிய காவிரி குடிநீர்


மணப்பாறை அருகே குழாயில் உடைப்பு 30 அடி உயரத்திற்கு பீரிட்டு வெளியேறிய காவிரி குடிநீர்
x
தினத்தந்தி 21 Sep 2019 11:00 PM GMT (Updated: 21 Sep 2019 5:28 PM GMT)

மணப்பாறை அருகே காவிரி குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு 30 அடி உயரத்திற்கு காவிரி குடிநீர் பீரிட்டு வெளியேறி வீணானது.

மணப்பாறை,

திருச்சி மாவட்டம் மணப்பாறை மற்றும் மருங்காபுரி ஆகிய 2 தாலுகா பகுதி கிராம மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வது காவிரி குடிநீர் தான். இதற்காக குழாய் மூலம் காவிரி குடிநீர் கொண்டு செல்லப்பட்டு வினியோகம் செய்யப்பட்டு வருகின்றது.

இந்த காவிரி நீர் மணப்பாறை பகுதிக்கு கரூர் மாவட்டம் குளித்தலையில் உள்ள காவிரி ஆற்றில் இருந்து நீரேற்று நிலையம் மூலம் அனுப்பி வைக்கப்படுகிறது. இதுமட்டுமின்றி குளித்தலையில் இருந்து மதுரை மாவட்டத்திற்கும் காவிரி குடிநீர் கொண்டு செல்வதற்கான கூட்டுக்குடிநீர் திட்ட குழாயும் காவல்காரன் பட்டி வழியாக செல்கின்றது.

குழாயில் திடீர் உடைப்பு

இந்த நிலையில் நேற்று காலை மணப்பாறையை அடுத்த காவல்காரன்பட்டி என்ற இடத்தில் குளித்தலையில் இருந்து மதுரை மாவட்டம் மேலூருக்கு காவிரி குடிநீர் கொண்டு செல்லப்படும் காவிரி கூட்டுக்குடிநீர் திட்ட குழாயில் திடீரென உடைப்பு ஏற்பட்டது. இதனால் சுமார் 30 அடி உயரம் வரை காவிரி குடிநீர் பீரிட்டு வெளியேற ஆரம்பித்தது.

சுமார் 1½ மணி நேரத்திற்கும் மேலாக பீரிட்டு வெளியேறிய குடிநீர், அப்பகுதியில் ஆறுபோல் பெருக்கெடுத்து ஓடியது. அருகிலுள்ள குளம் மற்றும் சாலையோரங்களில் லட்சக்கணக்கான லிட்டர் காவிரி குடிநீர் வீணாவதை பார்த்த பொதுமக்கள் இதுபற்றி குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர்.

வீணான குடிநீர்

உடனே அந்த குழாய்க்கு குடிநீர் வினியோகம் செய்வதை குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் நிறுத்தினார்கள். பின்னர் உடைப்பை சரிசெய்யும் பணியில் அவர்கள் ஈடுபட்டனர்.

மணப்பாறை பகுதியில் அவ்வப்போது காவிரி கூட்டுக்குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு ஏற்படுவது வாடிக்கையாகிவிட்டது. இதனால் லட்சக்கணக்கான லிட்டர் காவிரி குடிநீர் பயன்பாடின்றி வீணாவது பொதுமக்களையும், சமூக ஆர்வலர்களையும் வேதனை அடையச் செய்துள்ளது.

Next Story