பெண்ணின் இடுப்பில் இருந்த 4½ கிலோ கட்டி அகற்றம் அரசு டாக்டர்கள் சாதனை


பெண்ணின் இடுப்பில் இருந்த 4½ கிலோ கட்டி அகற்றம் அரசு டாக்டர்கள் சாதனை
x
தினத்தந்தி 21 Sep 2019 10:30 PM GMT (Updated: 21 Sep 2019 7:24 PM GMT)

பெண்ணின் இடுப்பில் இருந்த 4½ கிலோ கட்டி அகற்றம் அரசு டாக்டர்கள் சாதனை.

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி பகுதியை சேர்ந்தவர் தேவி (வயது 55). இவர் வயிற்றுவலி மற்றும் வயிறுவீக்கம் காரணமாக புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை மருத்துவ குழுவினர் ஸ்கேன் மூலம் பரிசோதித்து பார்த்ததில் இடுப்பு பகுதியில் ஒரு பெரிய கட்டி இருப்பது கண்டறியப்பட்டது. அது கேன்சர் கட்டியாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் மகப்பேறு மருத்துவத்துறையை சார்ந்த தலைமை மருத்துவர் அமுதா, புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணர் பாரதிராஜா, ரத்தநாள அறுவைசிகிச்சை நிபுணர் முரளி ஆகியோர் அடங்கிய குழுவினர் தேவிக்கு அறுவை சிகிச்சை செய்ய தீர்மானித்தனர். அதன்படி, கடந்த 9-ந் தேதி தேவிக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. 4½ மணி நேரம் நடந்த அறுவை சிகிச்சையில் தேவி வயிற்றில் இருந்து 4½ கிலோ கட்டியை டாக்டர்கள் அகற்றி சாதனை படைத்தனர். தொடர்ந்து தேவிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு இப்போது நலமாக உள்ளார்.

இதுகுறித்து மருத்துவமனை முதல்வர் டாக்டர் மீனாட்சிசுந்தரம் கூறுகையில், இடுப்பு பகுதியில் வந்துள்ள இந்த கட்டி ரெட்ரோபெரிடோனியல் டியூமர் என்று சொல்லப்படுகின்ற புற்றுநோய் (கேன்சர்) கட்டியாகும். ரெட்ரோபெரிடோனியல் டியூமர் என்று சொல்லப்படுகின்ற புற்றுநோய் கட்டியானது 5 வகைகளில் வெளிப்படலாம். அவை நீர்க்கட்டி, ரத்தக் குழாய்க்கட்டி, கொழுப்புக்கட்டி, கால்சியம் படிமக்கட்டி அல்லது நரம்புக்கட்டி போன்ற வடிவங்களில் ஏற்படலாம். இந்த கட்டியானது நரம்புகளை சுற்றியுள்ள உறைகளில் இருந்து வருகிற ஸ்வானோமா என்று சொல்லக்கூடிய கட்டியாகும். இந்தகட்டி சாதாரணமாக தலை, கழுத்து பகுதிகளில் தான் காணப்படும். இதுபோன்ற 200 கட்டிகள் தென்பட்டால் அதில் ஒன்றுதான் இந்த இடுப்பு பகுதியில் வரக்கூடிய கட்டியாக இருக்கும். இது நரம்பில் இருந்து வந்த கேன்சர் கட்டி என்று திசு பரிசோதனையில் தெரியவந்துள்ளது. தனியார் மருத்துவமனைகளில் ரூ.3 லட்சம் வரை ஆகக்கூடிய இந்த சிகிச்சை அரசு மருத்துவமனையில் காப்பீட்டு திட்டத்தின் கீழ் இலவசமாக செய்யப்பட்டுள்ளது என்றார்.

Next Story