எருமப்பட்டி அருகே லாரி-கார் மோதல்: குழந்தை உள்பட 5 பேர் பலி - கோவிலுக்கு சென்று திரும்பியபோது பரிதாபம்


எருமப்பட்டி அருகே லாரி-கார் மோதல்: குழந்தை உள்பட 5 பேர் பலி - கோவிலுக்கு சென்று திரும்பியபோது பரிதாபம்
x
தினத்தந்தி 21 Sep 2019 11:00 PM GMT (Updated: 21 Sep 2019 9:35 PM GMT)

எருமப்பட்டி அருகே லாரியும், காரும் மோதிய விபத்தில் கோவிலுக்கு சென்று திரும்பிய குழந்தை உள்பட 5 பேர் பலியானார்கள்.

எருமப்பட்டி, 

நாமக்கல் மாவட்டம் பரமத்தியை சேர்ந்தவர் கேசவன் (வயது 66). இவர் அங்கு ஜவுளிக்கடை நடத்தி வந்தார். இவரது மனைவி கண்ணம்மாள் (55). இவர்களின் மகன் சரவணன் (35), மருமகள் வசந்தி (32). இவர்களின் மகன் சாய்பிரசின் (1).

குழந்தை சாய்பிரசினுக்கு மொட்டை அடிக்க நேற்று ஒரு காரில் கேசவன் குடும்பத்தினர் திருச்சி மாவட்டம் துறையூர் பெருமாள் கோவிலுக்கு சென்றனர். இவர்களுடன் கேசவனின் நண்பர் ராஜேந்திரனும் (64) உடன் சென்றார். சரவணன் காரை ஓட்டிச்சென்றார். அங்கு குழந்தைக்கு மொட்டை அடித்துவிட்டு அனைவரும் காரில் வீடு திரும்பிக்கொண்டு இருந்தனர்.

எருமப்பட்டி அருகே உள்ள வரகூர் மாணிக்கவேலூர் பஸ்நிறுத்தம் பகுதியில் வந்தபோது காரும், எதிரே நாமக்கல்லில் இருந்து பெரம்பலூர் நோக்கி சென்ற லாரியும் எதிர்பாராதவிதமாக மோதிக்கொண்டன. இந்த விபத்தில் கார் அப்பளம்போல நொறுங்கியது. காரில் பயணம் செய்த கேசவன், கண்ணம்மாள், ராஜேந்திரன், சரவணன், குழந்தை சாய்பிரசின் ஆகிய 5 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.

இதுபற்றிய தகவல் அறிந்ததும் அங்கு விரைந்து சென்ற எருமப்பட்டி போலீசார் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதேபோல் விபத்தில் படுகாயம் அடைந்த வசந்தியை போலீசார் மீட்டு நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

இதற்கிடையே நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருளரசு சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தினார். இந்த விபத்து குறித்து எருமப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவர் பெரம்பலூரை சேர்ந்த வீராசாமியிடம் (42) விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசாரின் முதல்கட்ட விசாரணையில், காரை ஓட்டிச்சென்ற சரவணன் முன்னே சென்ற வாகனத்தை முந்த முயன்றபோது எதிரே வந்த லாரி மீது மோதி விபத்து ஏற்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது. தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

லாரியும், காரும் மோதிய விபத்தில் குழந்தை உள்பட 5 பேர் இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story