‘லட்சிய வீரர்கள் அடங்கிய அ.தி.மு.க.வை யாராலும் அழிக்க முடியாது’ அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேச்சு


‘லட்சிய வீரர்கள் அடங்கிய அ.தி.மு.க.வை யாராலும் அழிக்க முடியாது’ அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேச்சு
x
தினத்தந்தி 23 Sep 2019 11:15 PM GMT (Updated: 23 Sep 2019 2:47 PM GMT)

லட்சிய வீரர்கள் அடங்கிய அ.தி.மு.க. இயக்கத்தை யாராலும் அழிக்க முடியாது என்று அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி கூறினார்.

அருப்புக்கோட்டை,

அருப்புக்கோட்டை சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. சார்பில் அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் வெள்ளைகோட்டை எம்.ஜி.ஆர். திடலில் நடைபெற்றது. பொதுக்குழு உறுப்பினர் வீரசுப்பிரமணியன் தலைமை தாங்கினார். எம்.ஜி.ஆர். மன்ற மாவட்ட துணை செயலாளர் சோலைசேதுபதி, எம்.ஜி.ஆர். மன்ற தலைவர் கண்ணன், முன்னாள் ஒன்றிய குழு தலைவர் யோகா வாசுதேவன், நகர தலைவர் பம்பாய்மணி, முன்னாள் மாவட்ட கவுன்சிலர் காளியம்மாள் சங்கரலிங்கம், நகர துணை செயலாளர் முனியசாமி, கூட்டுறவு சங்க தலைவர் சங்கிலிசாமி, செயற்குழு உறுப்பினர் மகேஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் மண்டல செயலாளர் ராமர், முன்னாள் மாவட்ட பொருளாளர் சேரன் இஸ்மாயில், கூட்டுறவு சங்க தலைவர் கருப்பசாமிபாண்டியன், நம்நாடு ராமச்சந்திரன் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர். இதில் சிறப்பு விருந்தினர்களாக அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி, சாத்தூர் எம்.எல்.ஏ. ராஜவர்மன், தென்காசி எம்.எல்.ஏ. செல்வமோகன்தாஸ் பாண்டியன், தலைமை கழக பேச்சாளர் சண்முகம் ஆகியோர் கலந்துகொண்டு பேசினர்.

விழாவில் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி கூறியதாவது:–

மறைந்த முதல்–அமைச்சர்கள் எம்.ஜி.ஆர். உருவாக்கிய அ.தி.மு.க. என்ற இயக்கத்தை தலைமையேற்று வழி நடத்தி செல்பவர்களாக முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் திகழ்கிறார்கள். இந்த ஆட்சி 6 மாதம் கூட நீடிக்காது என்று தி.மு.க. தலைவர் ஸ்டாலின் கூறினார். ஆனால் 3 பட்ஜெட் கூட்டங்களை எந்தவித பிரச்சினையும் இல்லாமல் நடத்தி பல்வேறு திட்டங்களை அ.தி.மு.க. அரசு நிறைவேற்றியுள்ளது. வெளிநாடுகளுக்கு சென்று முதலீடுகளை ஈர்த்து முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தமிழக மக்களின் பாராட்டை பெற்றுள்ளார். தனது குடும்பத்தை மட்டும் சிந்திக்கும் தலைவராக ஸ்டாலின் உள்ளார் என்பதை மக்கள் புரிந்து உள்ளனர். சிறுபான்மை மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியும், சமுதாய பிரச்சினைகளை உருவாக்கியும் வாக்கு வங்கியை தி.மு.க.வினர் பெற்றுள்ளனர். அ.தி.மு.க. இயக்கத்தை யாராலும் அழிக்க முடியாது. லட்சிய வீரர்கள் அடங்கிய இயக்கம் அ.தி.மு.க.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story