அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பேச்சு குறித்து “நாடாளுமன்ற உரிமை குழுவிடம் முறையிடுவேன்” - மாணிக்கம்தாகூர் எம்.பி. பேட்டி


அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பேச்சு குறித்து “நாடாளுமன்ற உரிமை குழுவிடம் முறையிடுவேன்” - மாணிக்கம்தாகூர் எம்.பி. பேட்டி
x
தினத்தந்தி 23 Sep 2019 11:15 PM GMT (Updated: 23 Sep 2019 7:09 PM GMT)

அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேச்சு தொடர்பாக நாடாளுமன்ற உரிமை குழுவிடம் முறையிட உள்ளதாக மாணிக்கம்தாகூர் எம்.பி. கூறியுள்ளார். மேலும் இந்த விவகாரம் தொடர்பாக போலீசிலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

விருதுநகர்,

விருதுநகரில் மாணிக்கம்தாகூர் எம்.பி. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி உள்ளிட்டோர் வெளிநாடுகளுக்கு சென்று தொழில் முதலீடுகளை ஈர்த்து வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இந்த தொழில் முதலீடுகள் வருவதற்கு 3 ஆண்டுகள் ஆகும் எனவும் கூறப்படுகிறது. இந்தநிலையில் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி விருதுநகர் மாவட்டத்தில் தொழில் தொடங்க எந்த முதலீட்டை கொண்டு வந்தார்? மேலும் பால்வளத்துறை, கால்நடை துறை மேம்பாட்டிற்கும் அவர் என்ன திட்டங்களை கொண்டு வர உள்ளார்? எதுவுமே இருப்பதாக தெரியவில்லை.

அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி அமெரிக்கா சென்றுவிட்டு நாடு திரும்பியதில் இருந்து தடுமாற்றத்துடன் பேசி வருகிறார். காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் குறித்து விமர்சித்தார். என்னையும் அவதூறாக பேசியுள்ளார். நான் அவரை போல பேச தயாராக இல்லை.

என்னை அவதூறாக பேசியதாக அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி மீது காங்கிரஸ் நிர்வாகிகள் சாத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். போலீசார் நடவடிக்கை எடுக்காத நிலையில் கோர்ட்டில் மனு தாக்கல் செய்வோம்.

என்னைப்பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசி, மிரட்டல் விடுத்தது தொடர்பாக நாடாளுமன்ற சபாநாயகர் மூலம் மூத்த எம்.பி.க்கள் இடம்பெற்றுள்ள நாடாளுமன்ற உரிமை குழுவிடம் முறையிட உள்ளேன்.

திருத்தங்கல்-சிவகாசி இடையே ரெயில்வே மேம்பாலம் கட்டுவதில் மாநில அரசின் நெடுஞ்சாலைத்துறையானது, அணுகு சாலை தொடர்பாக 5 முறை மாற்றம் செய்துள்ளது. என்ன காரணத்திற்காக இந்த மாற்றம் தொடர்ந்து செய்யப்பட்டு வருகிறது என்று தெரியவில்லை. மாநில நெடுஞ்சாலைத்துறையின் தாமதத்தால்தான் திருத்தங்கல் ரெயில்வே மேம்பால கட்டுமான பணிகள் இன்னும் தொடங்கப்படாமல் முடங்கி போய் உள்ளது.

சிவகாசியில் பட்டாசு தொழில் தொடர்பாக மாநில அரசு எதையும் செய்யவில்லை. சுப்ரீம் கோர்ட்டில் இதுதொடர்பான மனு இன்னும் விசாரணைக்கு வராத நிலையில் பட்டாசு தொழில் பாதிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

சாத்தூரில் அ.தி.மு.க. சார்பில் நடந்த அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி, விருதுநகர் எம்.பி. மாணிக்கம்தாகூரை அவதூறாக பேசியதாக அவர் மீதும், கூட்டத்தில் கலந்துகொண்ட சாத்தூர் எம்.எல்.ஏ. ராஜவர்மன் மீதும் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி விருதுநகர் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஸ்ரீராஜா சொக்கர், சாத்தூர் நகர தலைவர் கருப்பசாமி மற்றும் கட்சியினர் சாத்தூர் டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். மேலும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜராஜனை சந்தித்தும் புகார் அளித்தனர்.

Next Story