நெய்தலூர் காலனியில் மோட்டார் சைக்கிள்கள் மோதல்; விவசாயி பலி


நெய்தலூர் காலனியில் மோட்டார் சைக்கிள்கள் மோதல்; விவசாயி பலி
x
தினத்தந்தி 23 Sep 2019 10:45 PM GMT (Updated: 23 Sep 2019 7:45 PM GMT)

நெய்தலூர் காலனியில் மோட்டார் சைக்கிள் மோதியதில், விவசாயி பரிதாபமாக இறந்தார். இதையடுத்து அவரது உடலை சாலையில் வைத்து உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர்.

நச்சலூர்,

கரூர் மாவட்டம், நச்சலூர் அருகே உள்ள தெற்குப்பட்டியை சேர்ந்தவர் தங்கவேல் (வயது 42), விவசாயி. இவர் தனது மகன் ராஜ்பாரதியுடன் (20), மோட்டார் சைக்கிளில் நெய்தலூரில் இருந்து பெருகமணிக்கு நேற்று முன்தினம் இரவு வந்து கொண்டிருந்தார். நெய்தலூர் காலனி டாஸ்மாக் கடை அருகே வந்தபோது, எதிரே பெரியபனையூரை சேர்ந்த மகேஷ்குமார் (20), நங்கவரத்தை சேர்ந்த விஜய், மணிகண்டன் ஆகியோர் வந்த மோட்டார் சைக்கிள், எதிர்பாராதவிதமாக தங்கவேல் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

விவசாயி பலி

இதில் தூக்கி வீசப்பட்ட தங்கவேல் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதைக்கண்ட அப்பகுதி பொதுமக்கள் குளித்தலை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். இதற்கிடையில் விபத்தை ஏற்படுத்திய மகேஷ்குமார் உள்பட 3 பேரும் மோட்டார் சைக்கிளை அங்கேயே போட்டு விட்டு தப்பியோடி விட்டனர்.

பின்னர் போலீசார் தங்கவேலுவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்புவதற்காக ஆம்புலன்சில் ஏற்றினர். இதை அறிந்து தங்கவேல் உறவினர்கள், பொதுமக்கள் சம்பவ இடத்திற்கு வந்து, தங்கவேலுவின் உடலை கொண்டு செல்ல விடாமல், ஆம்புலன்சை மறித்து நெய்தலூர் காலனி டாஸ்மாக் கடை முன்பு மறியலில் ஈடுபட்டனர்.

போக்குவரத்து பாதிப்பு

இதுகுறித்து தகவல் அறிந்த குளித்தலை போலீஸ் இன்ஸ்பெக்டர் திருமலைராஜன், சப்-இன்ஸ்பெக்டர் பாரதி, நெய்தலூர் வடக்கு கிராம நிர்வாக அதிகாரி வெங்கடேசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். அவர்கள் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது மறியலில் ஈடுபட்டவர்கள் கூறுகையில், இந்த டாஸ்மாக் கடை முன்பு அடிக்கடி விபத்துகள் நடக்கிறது. இதனால் டாஸ்மாக் கடையை இடமாற்றம் செய்ய வேண்டும். மேலும் தங்கவேலுவின் இறப்புக்கு காரணமானவர்களை கைது செய்ய வேண்டும். அதுவரை இங்கிருந்து செல்லமாட்டோம் என கூறினர்.

இதையடுத்து போலீசார், தங்கவேலுவின் இறப்புக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், டாஸ்மாக்கடையை இடமாற்றம் செய்வது குறித்து கலெக்டர் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என்றும் உறுதியளித்தனர்.

இதில் சமரசம் அடைந்த அனைவரும் கலைந்து சென்றனர். இதையடுத்து தங்கவேலுவின் உடலை பிரேத பரிசோதனைக்காக குளித்தலை அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். இந்த மறியலால் நங்கவரம்-பெருகமணி சாலையில் 2 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ஒருவர் கைது

இந்த விபத்து குறித்து தங்கவேலுவின் மகன் ராஜ்பாரதி குளித்தலை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாரதி, விபத்திற்கு காரணமான மகேஷ்குமார், விஜய், மணிகண்டன் ஆகிய 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்தார். பின்னர் மகேஷ்குமாரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். லேசான காயம் அடைந்ததால் மணிகண்டன், விஜய் ஆகியோர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 

Next Story