முகநூல் மூலம் பழகிய கள்ளக்காதலனுடன் மகள் ஓட்டம்; மனமுடைந்த பெண் பேரனை ஏரியில் தள்ளி கொன்றுவிட்டு தற்கொலை முயற்சி


முகநூல் மூலம் பழகிய கள்ளக்காதலனுடன் மகள் ஓட்டம்; மனமுடைந்த பெண் பேரனை ஏரியில் தள்ளி கொன்றுவிட்டு தற்கொலை முயற்சி
x
தினத்தந்தி 24 Sep 2019 10:45 PM GMT (Updated: 24 Sep 2019 7:05 PM GMT)

கே.ஆர்.பேட்டை தாலுகாவில் முகநூல் மூலம் பழகிய கள்ளக்காதலனுடன் மகள் ஓடிவிட்டதால் மனமுடைந்த பெண் தனது பேரனை ஏரியில் தள்ளி கொன்றுவிட்டு தானும் குதித்து தற்கொலைக்கு முயன்றார். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஹலகூர், 

மண்டியா மாவட்டம் கே.ஆர்.பேட்டை தாலுகா மாருதி கிராமத்தைச் சேர்ந்தவர் லட்சுமி(வயது 30). இவரது மகன் பிரஜ்வெல்(11). இச்சிறுவன் அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தான். இவர்களுடன் லட்சுமியின் தாயும் வசித்து வந்தார். லட்சுமியின் கணவர் வெளியூரில் தங்கி வேலை பார்த்து வருவதாக கூறப்படுகிறது. இதனால் லட்சுமி தனது மகன் மற்றும் தாயுடன் வசித்து வந்தார். அவர் அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் லட்சுமிக்கு முகநூல்(பேஸ்புக்) மூலம் வாலிபர் ஒருவர் அறிமுகமானார். பின்னர் இருவரும் தங்களுடைய செல்போன் எண்களை பரிமாறிக் கொண்டு பேசி வந்தனர். பின்னர் இவர்களுடைய பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது மகன் பிரஜ்வெல்லையும், தாயையும் விட்டுவிட்டு லட்சுமி தனது கள்ளக்காதலனுடன் ஓடிவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் லட்சுமியின் தாய் மனமுடைந்தார். அவமானத்தால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த அவர் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். அதன்படி நேற்று முன்தினம் பள்ளியில் இருந்து வீடு திரும்பிய தனது பேரன் பிரஜ்வெல்லை அழைத்துக் கொண்டு அவர் கிராமத்தையொட்டி அமைந்திருக்கும் சிந்தகட்டே ஏரிக்கு சென்றார்.

பின்னர் அவர் திடீரென பிரஜ்வெல்லை ஏரியில் தள்ளினார். அதையடுத்து அவரும் ஏரியில் குதித்து தற்கொலைக்கு முயன்றார். இதைப்பார்த்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அவர்கள் பிரஜ்வெல்லையும், அவனுடைய பாட்டியையும் மீட்க முயன்றனர். ஆனால் அவர்களால் பிரஜ்வெல்லை காப்பாற்ற முடியவில்லை. அவன் தண்ணீரில் மூழ்கி பலியானான். பிரஜ்வெல்லின் பாட்டியை மட்டும் மீட்டனர்.

பின்னர் இச்சம்பவம் குறித்து கே.ஆர்.பேட்டை புறநகர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த போலீசார், தீயணைப்பு துறையினருடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் ஏரியில் இருந்து சிறுவனின் உடலை தீயணைப்பு துறையினர் மீட்டனர். அதையடுத்து சிறுவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மாவட்ட அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். மேலும் பிரஜ்வெல்லை ஏரியில் தள்ளி கொலை செய்ததாக அவனுடைய பாட்டி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் அவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

முகநூல் மூலம் பழகிய கள்ளக்காதலனுடன் மகள் ஓடிவிட்டதால் மனமுடைந்த பெண் தனது பேரனை ஏரியில் தள்ளி கொன்றுவிட்டு தானும் குதித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Next Story