கார் பகுதியில் 5 மாடி கட்டிடம் இடிந்து சிறுமி பலி; 2 பேர் காயம்


கார் பகுதியில் 5 மாடி கட்டிடம் இடிந்து சிறுமி பலி; 2 பேர் காயம்
x
தினத்தந்தி 24 Sep 2019 11:55 PM GMT (Updated: 24 Sep 2019 11:55 PM GMT)

மும்பை கார் பகுதியில் 5 மாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில் சிறுமி பலியானாள். மேலும் 2 பேர் காயம் அடைந்தனர்.

மும்பை,

மும்பை கார் ஜிம்கானா பகுதியில் ‘போஹலா’ என்ற 5 மாடி குடியிருப்பு கட்டிடம் உள்ளது. இதில் 20-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வந்தன.

அந்த கட்டிடத்தின் ஒரு பகுதி நேற்று மதியம் 2.20 மணியளவில் பயங்கர சத்தத்துடன் திடீரென இடிந்து விழுந்தது. இதில் சிலர் சிக்கி கொண்டனர். கட்டிடத்தில் வசித்து வந்த மற்றவர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து இடிபாடுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது கட்டிட இடிபாடுகளில் சிறுமி உள்பட 3 பேர் சிக்கி கிடந்தனர். இதையடுத்து அவர்கள் 3 பேரையும் மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் சிறுமி செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தாள். விசாரணையில் அவளது பெயர் மகி மோத்வானி (வயது 10) என்பது தெரியவந்தது. மேலும் காயம் அடைந்த 2 பேரில் ஒருவர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார். மற்றொருவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையே கட்டிடத்தில் வசித்த அனைவரும் வெளியேற்றப்பட்டனர். மேலும் கட்டிடத்தில் சிக்கி தவித்த 21 பேரை ராட்சத ஏணி மூலம் தீயணைப்பு படையினர் மீட்டனர்.

கட்டிட விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

மும்பையில் ஆண்டுதோறும் மழைக்காலத்தில் கட்டிட விபத்துகள் வாடிக்கையாகி வருகின்றன. இந்த ஆண்டு கடந்த ஜூலை மாதம் தென்மும்பை டோங்கிரியில் பழுதடைந்த கட்டிடம் இடிந்து 13 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story