குடிநீர் கேட்டு ராஜபாளையம் யூனியன் அலுவலகம் முற்றுகை


குடிநீர் கேட்டு ராஜபாளையம் யூனியன் அலுவலகம் முற்றுகை
x
தினத்தந்தி 25 Sep 2019 10:45 PM GMT (Updated: 25 Sep 2019 2:27 PM GMT)

குடிநீர் கேட்டு ராஜபாளையம் யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்டு கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ராஜபாளையம்,

ராஜபாளையம் அருகே நல்லமநாயக்கர்பட்டியை அடுத்து அருந்ததியர் காலனி உள்ளது. இங்கு 50 குடும்பங்களை சேர்ந்த 200–க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இங்குள்ள ஆழ்துளை கிணறு கடந்த 4 மாதங்களுக்கு முன்னதாக வறண்டது. இதனால் தங்களுக்கு புதிய ஆழ்துளை கிணறு அமைத்து குடிநீர் வினியோகம் செய்யக்கோரி கடந்த 4 மாதங்களாக, வட்டார வளர்ச்சி அலுவலரிடம் மனு அளித்தனர். ஆனால் குடிநீர் பிரச்சினையை தீர்க்க ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இதனை கண்டித்து கடந்த 15 நாட்களுக்கு முன்னதாக அப்பகுதியை சேர்ந்த 50–க்கும் மேற்பட்டோர் போராட்டம் நடத்துவதற்காக ராஜபாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு புறப்பட்டனர். அப்போது அதிகாரிகள் ஒரு வாரத்திற்குள் புதிய ஆழ்துளை கிணறு அமைக்கப்படும் என உறுதி அளித்ததால் போராட்டத்தை கைவிட்டனர். ஒரு வாரம் ஆன நிலையிலும் பணிகள் ஏதும் தொடங்கப்பட வில்லை என கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் மற்றும் ஆதித்தமிழர் கட்சியை சேர்ந்த மாவட்ட தலைவர் சுந்தராஜன், செயலாளர் வசந்தன், மகளிர் அணி அமைப்பாளர் பெருமாளம்மாள், இளைஞரணி செயலாளர் அருள்ராஜ் ஆகியோர் முன்னிலையில் வட்டார வளர்ச்சி அலுவலரை கண்டித்து முற்றுகையிட முயன்றனர். ஆனால் போலீசார் அதற்கு அனுமதி தர மறுத்ததால் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்னதாக கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது தங்கள் பகுதிக்கு குடிநீர் வினியோகம் செய்யும் வரை அதே பகுதியில் காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட போவதாக கூறினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் ராஜபாளையம் தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் மாரியப்பன் மற்றும் அதிகாரிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். தண்ணீர் இல்லாத ஊருக்கு செல்வதை விட போராட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறைக்கு செல்ல தயாராக உள்ளதாக கூறிய கிராம மக்கள், போராட்டத்தை கைவிட மறுத்து விட்டனர்.

பின்னர், மாலைக்குள் புதிய ஆழ்துளை கிணறு அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்ததன்பேரில் போராட்டத்தை கைவிட்டு கிராமமக்கள் கலைந்து சென்றனர்.


Next Story