நடத்தையில் சந்தேகப்பட்டு 6 குழந்தைகளின் தாய் பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை - வாலாஜா அருகே பயங்கரம்


நடத்தையில் சந்தேகப்பட்டு 6 குழந்தைகளின் தாய் பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை - வாலாஜா அருகே பயங்கரம்
x
தினத்தந்தி 26 Sep 2019 10:45 PM GMT (Updated: 26 Sep 2019 8:25 PM GMT)

வாலாஜா அருகே நடத்தையில் சந்தேகப்பட்டு 6 குழந்தைகளின் தாய் பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்யப்பட்டார்.

வாலாஜா, 

வேலூர் மாவட்டம் வாலாஜாவை அடுத்த தேவதானம் பள்ளிக்கூட தெருவை சேர்ந்தவர் முத்து (வயது 60). இவர், வாலாஜாவில் கறிக்கடை நடத்தி வருகிறார். அவருடைய மனைவி ஈஸ்வரி (47). இவர்களுக்கு 4 மகள்களும், 2 மகன்களும் உள்ளனர்.

இந்த நிலையில் முத்துவிற்கு, ஈஸ்வரியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. கடந்த 24-ந் தேதி நள்ளிரவு ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த முத்து, தனது இருசக்கர வாகனத்தில் இருந்த பெட்ரோலை பாட்டிலில் பிடித்து வந்து ஈஸ்வரி மீது ஊற்றி தீ வைத்துள்ளார். இதில் தீக்காயம் அடைந்த ஈஸ்வரி சிகிச்சைக்காக வாலாஜா அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அதுபோல் தீக்காயம் அடைந்த முத்துவும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.இதுகுறித்து வாலாஜா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் நேற்று காலை சிகிச்சை பலனின்றி ஈஸ்வரி பரிதாபமாக உயிரிழந்தார். அவர், இறக்கும் முன்பு தன் கணவர் முத்து தான் என் இறப்புக்கு காரணம் என்று மரண வாக்குமூலம் கொடுத்திருந்தார். இதனால் கொலை முயற்சி வழக்கானது கொலை வழக்காக மாற்றப்பட்டது.

Next Story