சாமி ஊர்வலத்துக்கு வழிநெடுகிலும் பக்தர்கள் வரவேற்பு: பத்மநாபபுரம் அரண்மனையில் உடைவாள் மாற்றும் நிகழ்ச்சி


சாமி ஊர்வலத்துக்கு வழிநெடுகிலும் பக்தர்கள் வரவேற்பு: பத்மநாபபுரம் அரண்மனையில் உடைவாள் மாற்றும் நிகழ்ச்சி
x
தினத்தந்தி 26 Sep 2019 10:45 PM GMT (Updated: 26 Sep 2019 9:19 PM GMT)

பத்மநாபபுரத்தில் இருந்து 3 சாமி சிலைகள் திருவனந்தபுரம் நவராத்திரி விழாவில் பங்கேற்க ஊர்வலமாக புறப்பட்டன. இதனையொட்டி கேரள மந்திரிகள், குமரி மாவட்ட அதிகாரிகள் பங்கேற்ற உடைவாள் மாற்றும் நிகழ்ச்சி நடந்தது.

பத்மநாபபுரம்,

திருவிதாங்கூர் மன்னர் காலத்தில் பத்மநாபபுரம் அரண்மனையில் நவராத்திரி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வந்தது. 1840-ம் ஆண்டு சுவாதி திருநாள் மகாராஜா காலத்தில் நவராத்திரி விழா திருவனந்தபுரத்துக்கு மாற்றப்பட்டது. இதையடுத்து திருவனந்தபுரத்தில் நடைபெறும் விழாவில் குமரி மாவட்ட சாமி சிலைகளும் பங்கேற்பது வழக்கம். அதாவது, சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன், வேளிமலை முருகன், பத்மநாபபுரம் தேவாரக்கட்டு சரஸ்வதி அம்மன் சிலைகள் யானை மீதும், பல்லக்கின் மீதும் ஊர்வலமாக எடுத்து செல்லப்படும்.

அதன்படி இந்த ஆண்டு திருவனந்தபுரத்தில் 29-ந் தேதி நடைபெறும் நவராத்திரி விழாவில் பங்கேற்க சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன் பல்லக்கில் நேற்றுமுன்தினம் புறப்பட்டது. அன்றைய தினம் இரவு பத்மநாபபுரம் அரண்மனை அருகே உள்ள நீலகண்டசாமி கோவிலை அடைந்தது.

உடைவாள் மாற்றும் நிகழ்ச்சி

இதேபோல் குமாரகோவில் வேளிமலை முருகன் சிலையும் பத்மநாபபுரத்தை வந்தடைந்தது. இந்த நிலையில் நேற்று பத்மநாபபுரம் அரண்மனை உப்பரிகை மாளிகையில் தமிழக, கேரள ஒற்றுமையை வெளிப்படுத்தும் விதமாக மன்னரின் உடைவாள் மாற்றும் நிகழ்ச்சி மற்றும் சாமி சிலைகள் கேரளா பயணம் மேற்கொள்ளும் நிகழ்ச்சி நடைபெற்றது.

கேரள அறநிலையத்துறை மந்திரி கடனபள்ளி சுரேந்திரன், தொல்லியல் துறை மந்திரி கடகம் பள்ளி ராமசந்திரன், கோவளம் எம்.எல்.ஏ. வின்சென்ட், திருவனந்தபுரம் போலீஸ் சூப்பிரண்டு அசோகன், குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத், குமரி மாவட்ட கூடுதல் கலெக்டர் ராகுல்நாத், பத்மநாபபுரம் உதவி கலெக்டர் சரண்யா அரி, தக்கலை துணை சூப்பிரண்டு கார்த்திகேயன், மற்றும் தமிழக இந்து அறநிலையத்துறை அதிகாரிகள், வருவாய்த்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

செண்டை மேளத்துடன்...

உடைவாளை பத்மநாபபுரம் அரண்மணை மேலாளர் அஜித்குமார், கேரள தொல்லியல் துறை இயக்குனர் சோனாவிடம் ஒப்படைத்தார். பின்னர் கேரள மந்திரிகளிடமும், குமரி மாவட்ட இந்து அறநிலையத்துறை அதிகாரிகளிடமும் உடைவாள் மாற்றி கொடுக்கப்பட்டது. இறுதியில் குமரி மாவட்ட அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டது.

பின்னர் பல்லக்குகளில் சாமி சிலைகள் திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோவிலுக்கு புறப்படும் நிகழ்ச்சி நடந்தது. தமிழக, கேரள போலீசார் துப்பாக்கி ஏந்தி அணிவகுப்பு மரியாதை மேற்கொண்டனர். செண்டை மேளத்துடன் கலைஞர்களின் கதகளி, மயிலாட்டமும் நடந்தது. பத்மநாபபுரம் தேவாரக்கட்டு சரஸ்வதி அம்மன் சிலை, யானை மீது ஊர்வலமாக முன்னே செல்ல அதைத் தொடர்ந்து சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன், வேளிமலை முருகன் ஆகிய சிலைகள் பல்லக்குகளில் பின்தொடர்ந்தன.

கேரளத்தில் வரவேற்பு

சாமி சிலைகள் ஊர்வலம் இரவு குழித்துறை மகாதேவர் கோவிலை சென்றடைந்தது. முன்னதாக வழிநெடுகிலும் சாமி சிலைகளுக்கு பக்தர்கள் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் இன்று (வெள்ளிக்கிழமை) காலை அங்கிருந்து புறப்படும் சாமி சிலைகளுக்கு களியக்காவிளையில் கேரள அரசு சார்பில் பெண்கள் தாலப்பொலி ஏந்தி வரவேற்பு அளிக்கின்றனர். நெய்யாற்றின்கரை கிருஷ்ணசாமி கோவிலை சிலைகள் சென்றடைந்ததும் அங்கு பூஜைகள் நடத்தப்படும்.

நாளை (சனிக்கிழமை) திருவனந்தபுரம் செல்லும் சாமி சிலைகளுக்கு மேளதாளம் முழங்க வரவேற்பு அளிக்கப்படுகிறது. சரஸ்வதி அம்மன் திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோவில் கோட்டையில் உள்ள நவராத்திரி மண்டபத்திலும், வேளிமலை முருகன் ஆரியசாலை சிவன் கோவிலிலும், சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன் சிலை செந்திட்டை பகவதி அம்மன் கோவிலிலும் வைத்து நவராத்திரியை முன்னிட்டு 9 நாள் பூஜைகள் நடத்தப்படுகிறது. பூஜைகள் முடிந்த பின்பு மீண்டும் சாமி சிலைகள் குமரி மாவட்டம் வருகிறது.

Next Story