தூத்துக்குடியில் குறைதீர்க்கும் கூட்டத்தில் அதிகாரிகளை முற்றுகையிட்ட விவசாயிகள் மணல் திருட்டை தடுக்க கோரிக்கை


தூத்துக்குடியில் குறைதீர்க்கும் கூட்டத்தில் அதிகாரிகளை முற்றுகையிட்ட விவசாயிகள் மணல் திருட்டை தடுக்க கோரிக்கை
x
தினத்தந்தி 26 Sep 2019 11:06 PM GMT (Updated: 26 Sep 2019 11:06 PM GMT)

தூத்துக்குடியில் நடந்த குறைதீர்க்கும் கூட்டத்தில் அதிகாரிகளை விவசாயிகள் முற்றுகையிட்டனர். மணல் திருட்டை தடுக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று காலை கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் (பொறுப்பு) சிம்ரான்ஜீத் சிங் கலோன் தலைமை தாங்கினார். மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் தனபதி, வேளாண்மை இணை இயக்குனர் ஆசீர் கனகராஜ், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) பாலசுப்பிரமணியன், உதவி கலெக்டர்கள் தனப்பிரியா, விஜயா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் ம.தி.மு.க. விவசாய அணியை சேர்ந்தவர்கள் அதிகாரிகளை முற்றுகையிட்டனர். அவர்கள் தூத்துக்குடி மாவட்டத்தில் குடிமராமத்து பணி என்ற பெயரில் குளங்களில் தூர்வாரப்படும் மணலை விவசாயிகளுக்கு இலவசமாக கொடுப்பது இல்லை. ஆனால் மணல் திருட்டு நடக்கிறது. இதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் விவசாய இடுபொருட்கள், உரம் விலையை குறைக்க வேண்டும். உரங்களின் விலைப்பட்டியலை கடைகளில் வைக்க வேண்டும். இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் வெளிநடப்பு செய்வதாக கூறி விவசாயிகள் கூட்டத்தை விட்டு வெளியேறினர்.

தொடர்ந்து நடந்த கூட்டத்தில் விவசாயிகள் பேசியதாவது:-

தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் படைப்புழு தாக்குதலால் மக்காச்சோள பயிர் பாதிப்படைந்தது. இதனால் ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.7 ஆயிரத்து 400 இழப்பீடு வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் அறிவித்தார். ஆனால் 5 ஹெக்டேர் உள்ள விவசாயிகளுக்கு ரூ.6 ஆயிரம், ரூ.7 ஆயிரம் மட்டுமே இழப்பீடு வழங்கப்பட்டு உள்ளது. இதில் பெரும் ஊழல் நடந்து உள்ளது. பயிர் காப்பீட்டு தொகை பல விவசாயிகளுக்கு வழங்கப்படாமல் உள்ளது. அதனை விரைந்து வழங்க வேண்டும். சில கிராமங்களில் பிரீமியம் வசூல் செய்து உள்ளனர். ஆனால் தற்போது காப்பீட்டு திட்டத்தில் சேர்க்கப்படவில்லை என்று இன்சூரன்ஸ் நிறுவனத்தினர் தெரிவிக்கின்றனர். இதனால் இன்சூரன்ஸ் தொகை கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பிரதம மந்திரியின் ஓய்வூதிய திட்டத்தை முழுமையாக நிராகரிக்கிறோம். 60 வயது நிரம்பிய அனைத்து விவசாயிகளுக்கும் எந்தவித பிரீமியமும் செலுத்தாமல் பென்சன் வழங்க வேண்டும்.

தாமிரபரணி ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டாலும் பல குளங்களுக்கு தண்ணீர் வந்து சேரவில்லை. தண்ணீரை முறையாக கால்வாய்களில் பிரித்து கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கடம்பா குளத்துக்கு மண் அள்ளுவதற்காக தண்ணீர் திறக்கப்படாமல் உள்ளது. வேளாண்மை துறை அதிகாரிகள் வெளிப்படை தன்மையுடன் நடக்க வேண்டும். கள அலுவலர்கள் நேரில் சென்று ஆய்வு செய்து கணக்கெடுத்தால், பயிர் காப்பீட்டில் பிரச்சினை வர வாய்ப்பு இல்லை. மேலும் அதிகாரிகள் உதவியோடு மண் திருட்டு நடந்து வருகிறது. இதனை தடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதற்கு பதில் அளித்து மாவட்ட வருவாய் அலுவலர் (பொறுப்பு) சிம்ரான்ஜீத் சிங் கலோன் கூறியதாவது:-

பயிர் காப்பீட்டு தொகை முறையாக விவசாயிகளுக்கு கிடைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். தாமிரபரணி ஆற்றில் திறந்து விடப்படுகிற தண்ணீர், தற்போது எந்தெந்த பகுதிகளில் பயிர்களுக்கு தேவைப்படுகிறதோ, அந்த பகுதிக்கு வழங்கப்படுகிறது. 4 கால்வாய்கள் மூலம் முறையாக தண்ணீர் வழங்கப்படுகிறது. கடம்பா குளம் 1260 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இந்த குளத்துக்கு தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. அந்த குளம் நிரம்பிய பிறகு மற்ற குளங்களுக்கு தண்ணீர் வழங்கப்படும். ஒரு கிராமத்தில் 20 ஹெக்டேருக்கு அதிகமாக ஒரு பயிர் சாகுபடி செய்யப்பட்டால், அந்த கிராமம் காப்பீட்டு திட்டத்தில் சேர்க்கப்பட்டு வருகிறது. ஏதேனும் கிராமங்கள் விடுபட்டு இருந்தால் காப்பீட்டு திட்டத்தில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும். குளங்களில் மணல் திருட்டு நடந்தால் தீவிர நடவடிக்கை எடுக்கப்படும். பொதுவாக கூறாமல் முறைகேடு நடைபெறும் குளங்களை குறிப்பிட்டு கூறினால், உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story