இந்தியாவிலேயே பெண்களுக்கான திட்டங்கள் தமிழகத்தில் தான் சிறப்பாக செயல்படுத்தப்படுகிறது - அமைச்சர் செல்லூர் ராஜூ பேச்சு


இந்தியாவிலேயே பெண்களுக்கான திட்டங்கள் தமிழகத்தில் தான் சிறப்பாக செயல்படுத்தப்படுகிறது - அமைச்சர் செல்லூர் ராஜூ பேச்சு
x
தினத்தந்தி 27 Sep 2019 11:00 PM GMT (Updated: 27 Sep 2019 7:31 PM GMT)

இந்தியாவிலேயே பெண்களுக்கான திட்டங்கள் தமிழகத்தில் தான் சிறப்பாக செயல்படுத்தப்படுகிறது என அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார்.

மதுரை,

சமூகநலம் மற்றும் சத்துணவு திட்டத்துறை ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தின் சார்பில் கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி மதுரை மீனாட்சி கல்லூரியில் நடந்தது. கலெக்டர் ராஜசேகர் தலைமை தாங்கினார். அமைச்சர் செல்லூர் ராஜூ குத்துவிளக்கேற்றி விழாவை தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழக அரசு பெண்களின் நலனில் அக்கறை கொண்டு பல்வேறு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. கர்ப்ப காலத்தில் மகிழ்ச்சியாகவும், ஆரோக்கியமாகவும் இருந்தால் தான், பிறக்கும் குழந்தை ஆரோக்கியமாகவும், அறிவான குழந்தையாகவும் பிறக்கும் என்பது அறிவியல் பூர்வமான ஒன்று.

ஜெயலலிதா வழியில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்-அமைச்சர் பன்னீர் செல்வமும் சிறப்பாக ஆட்சி செய்து வருகின்றனர். அவர்கள் பெண்களுக்கான திட்டங்களுக்கு முன்னுரிமை கொடுத்து செயல்படுத்தி வருகின்றனர். பெண் சமுதாயம் அனைத்து துறைகளிலும் முதன்மை பெற்று விளங்க வேண்டும். பெண் குழந்தைகளை பாதுகாக்கும் தொட்டில் குழந்தை திட்டம், மகளிர் சுய உதவிக்குழு, மகளிர் காவல் நிலையம், ஏழை பெண்களுக்கு தாலிக்கு தங்கம், திருமண நிதி உதவி, மோட்டார் சைக்கிள் வாங்குவதற்கு மானியம் என எந்த மாநிலத்திலும் செயல்படுத்தாத திட்டங்களை செயல்படுத்தியது ஜெயலலிதா தான். வீடுகளில் பெண்கள் கஷ்டப்படக்கூடாது என்பதற்காக விலையில்லா மிக்சி, கிரைண்டர், மின் விசிறிகள் ஆகியவற்றை ஜெயலலிதா வழங்கினார். பெண்கள் நினைத்தால் எதையும் சாதிக்கலாம் என்று நிரூபித்தவர் ஜெயலலிதா. இந்தியாவிலேயே பெண்களுக்கான திட்டங்கள் சிறப்பாக செயல்படுத்தப்படுவது தமிழகத்தில் தான்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த விழாவில் 560 கர்ப்பிணிகள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு பெரிய தட்டு, ஊட்டச்சத்து மாவு, பேரீச்சம்பழம், வளையல் உள்பட பல்வேறு சீர்வரிசை பொருட்கள் வழங்கப்பட்டது.

மேலூர் ஒன்றியத்தில் கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா வண்ணாம்பாறைபட்டியில் நடைபெற்றது. 200 கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு நிகழ்ச்சியை மதுரை புறநகர் மாவட்ட இளைஞர் பாசறை செயலாளரும், மேலூர் சட்டமன்ற உறுப்பினருமான பெரியபுள்ளான் என்ற செல்வம், மதுரை புறநகர் மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான தமிழரசன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். கர்ப்பிணி பெண்களுக்கு மருத்துவ முகாம் மற்றும் அரசு நிதி உதவிகளும் வழங்கப்பட்டது .

இதில் மேலூர் ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் பொன்னுச்சாமி, கொட்டாம்பட்டி ஒன்றிய செயலாளர் வெற்றிசெழியன், எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளர் பெரியசாமி, மாவட்ட அவைத்தலைவர் எஸ்.என்.ராஜேந்திரன், முன்னாள் கவுன்சிலர் சரவணகுமார் , கொட்டகுடி கூட்டுறவு சங்கத்தலைவர் சுப்பையா, மேலூர் குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலர் நூரூல் அனிஷா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதேபோல் திருப்பரங்குன்றத்தில் கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு திருவிழா நடைபெற்றது. விழாவில் அரசு வக்கீல் ரமேஷ், கூத்தியார்குண்டு தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவர் நிலையூர் முருகன் தலைமை தாங்கினர். முன்னாள் கவுன்சிலர் முத்துக் குமார் முன்னிலை வகித்தார். திருப்பரங்குன்றம் கூட்டுறவு சங்க முன்னாள் தலைவர் பன்னீர்செல்வம் வரவேற்றார்.

விழாவில் சிறப்பு அழைப்பாளராக ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. கலந்து கொண்டு குத்து விளக்கு ஏற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். இதைதொடர்ந்து 320 கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு நடந்தது. இதைதொடர்ந்து நலத்திட்ட உதவிகளை வழங்கி ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. பேசினார். அப்போது அவர் கூறும்போது, கர்ப்பிணி பெண்கள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். அப்போதுதான் சிசுவும் மகிழ்ச்சியாக வளரும். இந்தியாவிலேயே மருத்துவ துறையில் தமிழ்நாடு சிறந்து விளங்குகிறது. பெண் கருவுற்ற முதல் குழந்தை பெற்றெடுக்கும் வரை பல்வேறு சலுகைகளை அரசு வழங்கி வருகிறது. என்றார்.

இதில் எம்.ஜி.ஆர். மன்ற மாவட்ட செயலாளர் சந்திரன், ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர்கள் கருத்த கண்ணன், பாலமுருகன், வட்ட செயலாளர் பொன் முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story