ஆதிசுஞ்சனகிரி மடாதிபதியின் தொலைபேசி ஒட்டுகேட்கப்பட்டதா? தாங்க முடியாத வலி ஏற்பட்டுள்ளதாக குமாரசாமி கருத்து


ஆதிசுஞ்சனகிரி மடாதிபதியின் தொலைபேசி ஒட்டுகேட்கப்பட்டதா? தாங்க முடியாத வலி ஏற்பட்டுள்ளதாக குமாரசாமி கருத்து
x
தினத்தந்தி 29 Sep 2019 11:30 PM GMT (Updated: 29 Sep 2019 8:16 PM GMT)

ஆதிசுஞ்சனகிரி மடாதிபதியின் தொலைபேசி ஒட்டுகேட்கப்பட்டதாக வெளியான தகவல், மிகுந்த வலியை ஏற்படுத்தியுள்ளதாக குமாரசாமி தெரிவித்துள்ளார்.

பெங்களூரு,

கர்நாடகத்தில் குமாரசாமி முதல்-மந்திரியாக இருந்தபோது எதிர்க்கட்சி தலைவர்கள் உள்பட பல்வேறு முக்கிய பிரமுகர்களின் தொலைபேசி ஒட்டுகேட்கப்பட்டதாக புகார் எழுந்தது. இதுகுறித்து கர்நாடக அரசு சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணையை தொடங்கியுள்ளனர்.

பெங்களூரு நகர போலீஸ் கமிஷனராக இருந்த அலோக்குமாரிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தியுள்ளனர். இந்த நிலையில் ஆதிசுஞ்சனகிரி மடாதிபதி நிர்மலானந்தநாத சுவாமி உள்பட சில மடாதிபதிகளின் தொலைபேசி உரையாடலும் ஒட்டுகேட்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது குறித்து முன்னாள் முதல்- மந்திரி குமாரசாமி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியதாவது:-

நான் முதல்-மந்திரியாக இருந்தபோது ஆதிசுஞ்சனகிரி மடாதிபதி நிர்மலானந்தநாத சுவாமியின் தொலைபேசி உரையாடல் ஒட்டுகேட்கப்பட்டதாக எழுந்த புகார் மற்றும் சில அரசியல் கட்சிகளின் தலைவர்கள் இதுகுறித்து தெரிவித்த கருத்துகள், எனது இதயத்தில் தாங்க முடியாத வலியை ஏற்படுத்தியுள்ளது.

இவை எல்லாவற்றுக்கும் மேலாக அந்த மடாதிபதியின் மனதில் ஏற்பட்டிருக்கும் வேதனையை நினைக்கும்போது, எனக்கு ஏற்பட்டுள்ள வலியை மேலும் அதிகரிப்பதாக உள்ளது. நான் ஆட்சியை நடத்தியபோது, நிர்மலானந்தநாத சுவாமி தார்மீக பலமாக இருந்தார். தனது சமூக நல பணிகள் மூலம் எனக்கு வழிகாட்டியாக இருந்தார். எனக்காக காலபைரவேஸ்வரா கோவிலில் வழிபாடு நடத்தினார்.

அவரை நான் சந்தேகப்பட முடியுமா?. இது சாத்தியமா?. இந்த விவகாரத்தில் தேவை இல்லாமல் எனது பெயரை இழுக்கிறார்கள். நடக்காத ஒரு தவறுக்காக வருவாய்த்துறை மந்திரி ஆர்.அசோக் மன்னிப்பு கேட்டுள்ளார். இதனால் அவருக்கு என்ன லாபம் கிடைக்கும் என்று எனக்கு தெரியவில்லை.

இவ்வாறு குமாரசாமி தெரிவித்துள்ளார்.

Next Story