நாமக்கல்லில் டெங்கு காய்ச்சல் ஒழிப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை - கலெக்டர் மெகராஜ் ஆய்வு


நாமக்கல்லில் டெங்கு காய்ச்சல் ஒழிப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை - கலெக்டர் மெகராஜ் ஆய்வு
x
தினத்தந்தி 29 Sep 2019 10:45 PM GMT (Updated: 29 Sep 2019 8:43 PM GMT)

நாமக்கல் நகராட்சி பகுதியில் டெங்கு காய்ச்சலை ஒழிக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை கலெக்டர் மெகராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

நாமக்கல், 

மழைக்காலங்களில் மழை நீரானது வீடுகளின் மேற்பகுதிகளிலும், தேங்காய் சிரட்டை, அம்மிக்கல், தூக்கி எறியப்பட்ட பிளாஸ்டிக் கப்புகள், டயர்கள் போன்றவற்றிலும் தேங்குவதாலும், வீடுகளில் குடிதண்ணீரை சேமித்து வைக்கும் பாத்திரங்களை மூடி வைக்காமல் இருப்பதாலும் டெங்கு கொசுக்கள் நன்னீரில் முட்டையிட்டு உற்பத்தியாகின்றன.

நாமக்கல் மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக டெங்கு காய்ச்சலை ஏற்படுத்தும் கொசுக்கள் உருவாகாமல் தடுக்கும் வகையில் நாமக்கல் மாவட்டத்தில் நகராட்சி, ஊரக வளர்ச்சித்துறையினர் மற்றும் சுகாதாரத்துறையினர் மூலமாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. குடிநீர் பிடிக்கும் பாத்திரங்களை மூடி பயன்படுத்தவும், பயன்படுத்தாமல் உள்ள பொருட்களில் தண்ணீர் தேங்காமல் தடுக்கவும், வீடுகளின் மேற்பகுதிகளில் தண்ணீர் தேங்காமல் சுத்தம் செய்யவும் வீடு, வீடாக சென்று அறிவுறுத்தப்படுகிறது.

இந்த நிலையில் நாமக்கல் நகராட்சி என்.கொசவம்பட்டி, செட்டியார் தெரு மேற்கு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாவட்ட கலெக்டர் மெகராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின்போது அவர் தண்ணீர் பிடித்து வைக்கப்பட்டு உள்ள பாத்திரங்களில் கொசுப்புழுக்கள் ஏதேனும் இருக்கின்றனவா? என்றும், முறையாக மூடி பயன்படுத்தப்படுகின்றனவா? என்றும், குப்பைகள் அகற்றப்பட்டு இருக்கின்றதா? என்றும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் டெங்கு காய்ச்சலை உருவாக்கும் கொசுக்களால் ஏற்படும் பாதிப்பு, உருவாகாமல் தடுக்கும் முறைகள் குறித்து பெண்களுக்கு எடுத்துரைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

அப்போது நாமக்கல் நகராட்சி ஆணையர் சுதா மற்றும் நகராட்சி அலுவலர்கள், சுகாதார அலுவலர்கள், நகராட்சி பணியாளர்கள் உடன் இருந்தனர்.

Next Story