வானூர் அருகே, கார் கவிழ்ந்து டிரைவர் பலி - 3 பேர் படுகாயம்


வானூர் அருகே, கார் கவிழ்ந்து டிரைவர் பலி - 3 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 29 Sep 2019 9:30 PM GMT (Updated: 29 Sep 2019 11:34 PM GMT)

வானூர் அருகே கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் டிரைவர் பலியானார். மேலும் 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

வானூர்,

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் மாதாகோவில் வீதியை சேர்ந்தவர் லியோ. கார் டிரைவர். விடுமுறை நாளான நேற்று இவர் தனது காரில் அதே பகுதியை சேர்ந்த நண்பர்களான ஜெயப்பிரகாஷ்(26), ஜீவா அருள்(30), மனோஜ்(35) ஆகியோருடன் புதுவை நோக்கி வந்தார். திண்டிவனம் 4 வழி சாலையில் கார் வந்து கொண்டு இருந்தது.

காட்ராம்பாக்கம் மெயின் ரோட்டில் வந்த போது திடீரென சாலையின் குறுக்கே மாடு ஒன்று சென்றது. இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த டிரைவர் லியோ பிரேக் பிடித்து காரை நிறுத்த முயன்றார். ஆனால் அதற்குள் அந்த கார் மாட்டின் மீது மோதியது. மேலும் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி சாலையின் எதிரில் வந்த மற்றொரு கார் மீது மோதி தலைகுப்புற கவிழ்ந்தது.

இதில் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே டிரைவர் லியோ பலியானார். காரில் அடிபட்ட மாடும் பலியானது. இதை அந்த வழியாக வந்தவர்கள் மற்றும் கிராம மக்கள் பார்த்தவுடன் அங்கு ஓடி வந்து காயமடைந்த ஜெயப்பிரகாஷ், ஜீவா அருள், மனோஜ் ஆகியோரை மீட்டு சிகிச்சைக்காக புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த விபத்து குறித்து கிளியனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story