திருச்சி கலெக்டர் அலுவலகம் அருகே தரைக்கடை வியாபாரிகள் ஆர்ப்பாட்டம்


திருச்சி கலெக்டர் அலுவலகம் அருகே தரைக்கடை வியாபாரிகள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 30 Sep 2019 11:00 PM GMT (Updated: 30 Sep 2019 6:50 PM GMT)

‘ஸ்மார்ட் சிட்டி’ என்ற பெயரில் அப்புறப்படுத்துவதாக குற்றஞ்சாட்டி, தரைக்கடை வியாபாரிகள் திருச்சி கலெக்டர் அலுவலகம் அருகில் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

திருச்சி,

திருச்சி மாநகரில் ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டப்பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. திருச்சி சத்திரம் டவுன் பஸ் நிலையப்பகுதியை புதுப்பொலிவு பெற செய்யும் நடவடிக்கையாக, அப்பகுதியில் உள்ள தரைக்கடை வியாபாரிகளை கடந்த சில நாட்களுக்கு முன்பு மாநகராட்சி நிர்வாகம் அப்புறப்படுத்தியது. தரைக்கடை வியாபாரிகள் நடத்திய போராட்டம் காரணமாக, அம்முயற்சி கைவிடப்பட்டது. சத்திரம் டவுன் பஸ் நிலையத்தை புதுப்பிக்கும் பணி கிடப்பில் போடப்பட்டது.

இந்த நிலையில் திருச்சி மாநகர் மாவட்ட தரைக்கடை, சிறுகடை வியாபாரிகள் சங்கம் சார்பில், தெரு வியாபாரத்தை முறைப்படுத்துதல், தெரு வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாத்தல் சட்டம் குறித்த விழிப்புணர்வு பிரசாரம் கடந்த 23-ந் தேதி முதல் தொடங்கி நடத்தப்பட்டு வந்தது.

ஆர்ப்பாட்டம்

விழிப்புணர்வு பிரசாரத்தின் நிறைவு நாளான நேற்று திருச்சி கலெக்டர் அலுவலகம் அருகில் தரைக்கடை, சிறுகடை வியாபாரிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயலாளர் அன்சர்தீன் தலைமை தாங்கினார். தரைக்கடை வியாபாரிகள் சங்க அமைப்பு செயலாளர் சிவா, மாவட்ட தலைவர் திராவிட மணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட தலைவர் சுரேஷ், வங்கி ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் ராமராஜ் உள்ளிட்ட பலர் வாழ்த்தி பேசினர். ஆர்ப்பாட்டத்தில் பெருவணிகர்களுக்கு ஆதரவாக மாநகராட்சி நிர்வாகம் செயல்படுவதாகவும், தரைக்கடைகளுக்கு உரிய அனுமதி அளித்தால், அதற்கான கட்டணம் கட்டவும் தயாராக இருக்கிறோம் என்றும், ஸ்மார்ட் சிட்டி திட்டம் என்ற பெயரில் தரைக்கடை, சிறுகடை வியாபாரிகளை அப்புறப்படுத்தக்கூடாது என்றும் கோஷம் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் திரளானவர்கள் கலந்து கொண்டனர்.

வெளியேற்ற அதிகாரம் இல்லை

ஆர்ப்பாட்டத்தின்போது நிர்வாகிகள் கூறுகையில், ‘தெரு வியாபாரத்தை முறைப்படுத்துதல், தெரு வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாத்தல் சட்டம் பற்றி சரியான புரிதல் இல்லாமல் போலீசாரும், உள்ளாட்சித்துறை, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளும் தெரு வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை பறிக்க பார்க்கிறார்கள். தெரு வியாபாரிகளை வெளியேற்றவோ, வேறு இடத்திற்கு மாற்றவோ போலீசார் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு எவ்வித அதிகாரமும் வழங்கப்படவில்லை. தெரு வியாபாரிகள் கணக்கெடுப்பு நடத்தி, 5 ஆண்டுக்கு ஒருமுறை புதுப்பிக்கக்கூடிய வியாபார சான்றிதழ் வழங்கப்பட வேண்டும். அடையாள அட்டையும் வழங்க வேண்டும். அதை விடுத்து, ஸ்மார்ட் சிட்டி என்ற பெயரில் தற்போது வியாபாரம் செய்யும் சத்திரம் பஸ் நிலையம், என்.எஸ்.பி. ரோடு, நந்தி கோவில், தெப்பக்குளம், தேரடி பஜார், ஸ்ரீரங்கம், ஜங்ஷன் போன்ற மற்ற பகுதிகளில் தரைக்கடைகளை அப்புறப்படுத்தக்கூடாது. தரைக்கடை வியாபாரிகள் அந்தந்த பகுதியிலேயே ஒழுங்குபடுத்தி வியாபாரம் செய்திட வழிவகை செய்திட வேண்டும்” என்றனர்.

Next Story