பல்லடம் அருகே ஆர்ப்பாட்டத்தின் போது கைதான எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில நிர்வாகி இறந்ததால் பரபரப்பு


பல்லடம் அருகே ஆர்ப்பாட்டத்தின் போது கைதான எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில நிர்வாகி இறந்ததால் பரபரப்பு
x
தினத்தந்தி 30 Sep 2019 11:30 PM GMT (Updated: 30 Sep 2019 7:05 PM GMT)

பல்லடம் அருகே ஆர்ப்பாட்டத்தின் போது கைதான எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில நிர்வாகி இறந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

காமநாயக்கன்பாளையம்,

திருப்பூர் மாவட்டம், பல்லடம் அறிவொளி நகரை சேர்ந்தவர் ஹாரிஸ்பாபு(வயது 34). இவர் சமீபத்தில் தனது முகநூல் பக்கத்தில் இந்து முன்னணி நிர்வாகி ஒருவரை பற்றி அவதூறாக செய்தியை பதிவு செய்து இருந்தார். இது குறித்து இந்து முன்னணியின் திருப்பூர் தெற்கு ஒன்றிய செயலாளர் ராஜ்குமார் பல்லடம் போலீசில் புகார் செய்து இருந்தார். இதன் பேரில் கடந்த 27-ந்தேதி ஹாரிஸ்பாபுவை போலீசார் கைது செய்தனர்.

இந்த நிலையில் அனைத்து முஸ்லிம் கூட்டமைப்பினர் நேற்று காலை பல்லடம் போலீஸ் நிலையத்துக்கு திரண்டு வந்து, ஹாரிஸ்பாபு வெளியிட்ட கருத்துக்கு அவரை கைது செய்துள்ளீர்கள் என்றும், அவர் வெளியிட்ட கருத்துக்கு அவதூறாக பதில் அளித்தவர்களையும் கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்திஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கேட்டனர். இதற்கு போலீசார் அனுமதி அளிக்கவில்லை.

இந்த நிலையில் போலீசாரை கண்டித்து கோவை-திருச்சி நெடுஞ்சாலையில் பல்லடம் அருகே கொசவம்பாளையம் பிரிவு பகுதியில் முஸ்லிம் கூட்டமைப்பினர் ஒன்று சேர்ந்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். போலீசாரின் தடையை மீறி இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.இதில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினரான மதுரையை சேர்ந்த சையது இப்ராஹிம்(வயது40) என்பவரும் கலந்து கொண்டார்.

இது பற்றி அறிந்ததும் பல்லடம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.அங்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சையது இப்ராஹிம் உள்பட 369 பேரை கைது செய்தனர்.கைதானவர்களை பல்லடம் மங்கலம் சாலையில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.

இந்த நிலையில் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டு இருந்த சையது இப்ராஹிமுக்கு திடீரென்று உடல்நலம் பாதிக்கப்பட்டது. உடனே போலீசார் அவரை மீட்டு சிகிச்சைக்காக பல்லடம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், மாரடைப்பு ஏற்பட்டு சையது இப்ராஹிம் இறந்ததாக தெரிவித்தனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட எஸ்.டி.பி.ஐ. கட்சி மாநில நிர்வாகி திடீரென இறந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து பல்லடம் நகர் முழுவதும் மாவட்ட போலீஸ் கூடுதல் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன் தலைமையில் 300-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது கைதானவர்கள் அனைவரும் மாலையில்விடுவிக்கப்பட்டனர்.

Next Story