வத்திராயிருப்பு அருகே 5 வருடங்களுக்கு பிறகு நிரம்பிய கண்மாய் உடைந்தது


வத்திராயிருப்பு அருகே 5 வருடங்களுக்கு பிறகு நிரம்பிய கண்மாய் உடைந்தது
x
தினத்தந்தி 1 Oct 2019 10:30 PM GMT (Updated: 1 Oct 2019 7:52 PM GMT)

வத்திராயிருப்பு அருகே 5 வருடங்களுக்கு பிறகு நிரம்பிய கண்மாய் உடைந்து தண்ணீர் வீணானது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.

வத்திராயிருப்பு,

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு விடிய, விடிய கனமழை கொட்டித் தீர்த்தது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்த கன மழையால் இந்த பகுதியில் உள்ள அருவிகளில் தண்ணீர் கொட்டியது. பிளவக்கல் பெரியாறு அணை, கோவில் ஆறு அணை, அத்தி கோவில் ஆற்றுப் பகுதி மற்றும் தாணிப்பாறை ஆகிய பகுதிகளுக்கு நீர் வர துவங்கியுள்ளது.

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்த கனமழையால் வத்திராயிருப்பு அனுப்பங்குளம் கண்மாய் ஒரே நாளில் நிரம்பியது. 5 வருடங்களுக்குப் பிறகு நிரம்பிய நிலையில் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்த நிலையில் கண்மாய்க்கு அதிகமான நீர்வரத்து இருந்ததால் கண்மாய் கரையில் நீர் கசிவு ஏற்பட்டது. அந்த பகுதியில் உள்ள விவசாயிகள் உடைப்பு ஏற்பட்ட கரையில் மண் நிரப்பி சரி செய்தனர். எனினும் அதிகாலை 4 மணியளவில் கண்மாய் கரையில் திடீரென உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் முழுவதும் வீணாக வெளியேறி அருகில் உள்ள ஊஞ்சான்குளம், செங்குளம் கண்மாய்களுக்கு சென்றது.

தகவலறிந்து சென்ற பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் கண்மாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து இந்த பகுதி விவசாயிகள் வேதனையுடன் கூறியதாவது:-

அனுப்பங்குளம் கண்மாய் மூலம் 375 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும். கனமழையால் இந்த கண்மாய் 5 வருடங்களுக்கு பிறகு நிரம்பியது இந்த நிலையில் கண்மாய்க்கரை திடீரென உடைந்து தண்ணீர் வீணாகி உள்ளது. உடைப்பு ஏற்பட்டதால் கண்மாய் மண் வயல்வெளிகளில் நிரம்பியுள்ளது. இந்த மண்ணை வயல்வெளிகளில் இருந்து அகற்றுவதற்கு பெரும் செலவாகும். மண்ணை அகற்றிய பின் விவசாயம் செய்வதற்கு கண்மாயில் போதிய தண்ணீர் இல்லை. மீண்டும் தண்ணீர் வந்தால்தான் விவசாய பணிகளை மேற்கொள்ள முடியும். இவ்வாறு கூறினர்.

கண்மாயை பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் காளிசரண் மற்றும் வருவாய் துறையினர் பார்வையிட்டனர்.

Next Story