1640 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு - கலெக்டர் தகவல்


1640 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு - கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 1 Oct 2019 10:15 PM GMT (Updated: 1 Oct 2019 9:59 PM GMT)

மாவட்டத்தில் 1640 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு நடத்தப்படுவதாக கலெக்டர் சிவஞானம் தெரிவித்தார்.

விருதுநகர்,

விருதுநகர் பாண்டியன் நகரில் நடைபெற்ற சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியில் 280 கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு சீதனப் பொருட்களையும், கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கான வழிகாட்டுதல் கையெட்டினையும் கலெக்டர் சிவஞானம் வழங்கினார். இதனை தொடர்ந்து அவர் கூறியதாவது:-

கர்ப்ப கால முன், பின் பராமரிப்பு குழந்தைக்கு உணவூட்டும் முறைகள், குழந்தை வளர்ப்பு, தடுப்பூசிகள் போன்ற பல தகவல்கள் குறித்து கர்ப்பிணிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக இந்த சமுதாய வளைகாப்பு விழா வட்டார அளவில் நடத்தப்படுகிறது.

அதன்படி, மாவட்டத்தில் உள்ள 11 குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலகங்களிலும் உள்ள 41 தொகுதிகளிலும் உள்ள 1640 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா வட்டார அளவில் நடைபெறுகிறது.

இந்தியாவில் தலைமுறை, தலைமுறையாக ஊட்டச்சத்து பற்றாக்குறை தொடர்வதால், இதை சரி செய்ய, வளர் இளம் பெண்கள், கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் மீது தனிக் கவனம் செலுத்த வேண்டியது மிகவும்அவசியமாகும்.

எதிர்கால சந்ததியினரான இன்றைய குழந்தைகள் ஆரோக்கியமானவர்களாக இருக்க வேண்டும் அப்போது தான் நாளைய சமுதாயம் ஆரோக்கியமான சமுதாயமாக இருக்கும்.

குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாட்டுடன் இருப்பது அல்லது வயதிற்கேற்ற எடை மற்றும் உயரம் இல்லாமல் இருப்பது போன்றவற்றை நாம் கவனிக்காமல் விட்டால், எதிர்காலத்தில் அவர்கள் ஆரோக்கிய குறைபாட்டுடன், வேலை செய்யும் திறன் குறைந்தவர்களாகத் தான் இருப்பார்கள். 6 மாதம் வரை தாய்ப்பால் மட்டும் கொடுக்கும் காலம், குழந்தைகளுக்கு ஏற்படும் ஊட்டச்சத்து பற்றாக்குறையை தடுக்க தேவையான கவனிப்புகள் அளிக்கப்படுவதற்கு முழு கவனம் செலுத்தப்பட வேண்டும்.

இவ்வாறு கூறினார்.

விழாவில் விருதுநகர் வட்டார குழந்தை வளர்ச்சித்திட்ட அலுவலர் ஹேமலதா, விருதுநகர் வட்டார மருத்துவ அலுவலர் பிரேமா, விருதுநகர் வட்டார ஒருங்கிணைப்பாளர் அலுவலர் கார்த்திகா ஆகியோரும் கலந்து கொண்டனர்.

வெம்பக்கோட்டை தாலுகாவில் உள்ள கல்லம நாயக்கன்பட்டி, தாயில்பட்டி, செவல்பட்டி ஆரம்ப சுகாதார நிலையங்கள் சார்பில் 206 பேருக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடந்தது.

நிகழ்ச்சிக்கு யூனியன் ஆணையாளர் சிவகுமார் தலைமை தாங்கினார். தாசில்தார் வானதி முன்னிலை வகித்தார். ராஜவர்மன் எம்.எல்.ஏ. குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.

விழாவில் வெம்பக்கோட்டை ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர்கள் ராமராஜ்பாண்டியன், மணிகண்டன், ராஜபாளையம் ஒன்றிய செயலாளர் வேல்முருகன், சாத்தூர் நகரசெயலாளர் வாசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதேபோல தளவாய்புரம் அருகே உள்ள சேத்தூரில் நடந்த விழாவுக்கு ராஜபாளையம் தாசில்தார் ஆனந்தராஜ் தலைமை தாங்கினார். வருவாய் ஆய்வாளர் முத்து ராமலிங்கம் முன்னிலை வகித்தார். 160 கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு நடத்தப்பட்டது.

இதனைத் தொடர்ந்து கர்ப்ப கால ஆலோசனை வழங்கப்பட்டது. இதில் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் கருணாகரபிரபு மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஏற்பாடுகளை ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் பங்கஜம் செய்து இருந்தார்.

Next Story