புதுவை அருகே மீன்பிடி வலைகளுக்கு தீ வைப்பு: பதற்றம்; துப்பாக்கி ஏந்திய போலீஸ் குவிப்பு


புதுவை அருகே மீன்பிடி வலைகளுக்கு தீ வைப்பு: பதற்றம்; துப்பாக்கி ஏந்திய போலீஸ் குவிப்பு
x
தினத்தந்தி 3 Oct 2019 12:00 AM GMT (Updated: 2 Oct 2019 7:58 PM GMT)

புதுவை அருகே மீன்பிடி வலைகளை மர்ம நபர்கள் தீ வைத்து எரித்தனர். இதனால் பதற்றமான சூழ்நிலை நிலவுவதால் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.

பாகூர்,

புதுச்சேரியை அடுத்த வீராம்பட்டினம், நல்லவாடு கிராமங்களை சேர்ந்த மீனவர்களுக்கு இடையே மீன் பிடிப்பது தொடர்பாக நீண்ட காலமாக மோதல் இருந்து வருகிறது. வீராம்பட்டினம் எல்லையில் பிற கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் மீன் பிடிக்கக்கூடாது என பஞ்சாயத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

நல்லவாடு மீனவர்கள் கடந்த 28-ந்தேதி நடுக்கடலில் மீன் பிடித்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த வீராம்பட்டினம் மீனவர்கள், இது எங்கள் பகுதி. இங்கு நீங்கள் மீன்பிடிக்க கூடாது என்று கூறினர். இதனால் 2 கிராமங்களை சேர்ந்த மீனவர்களுக்கும் நடுக்கடலில் மோதல் ஏற்பட்டது. இதில் நல்லவாடு மீனவர்களின் வலை சேதப்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக போலீசில் அளித்த புகாரின்பேரில் வீராம்பட்டினத்தை சேர்ந்த 120-க்கும் மேற்பட்ட மீனவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்தநிலையில் நல்லவாடு மீனவர்கள், வழக்கம்போல் நேற்று முன்தினம் கடலுக்கு சென்று மீன்பிடித்துவிட்டு கரைக்கு திரும்பினர். பின்னர் தங்களது வலைகளை கடற்கரை பகுதியில் உள்ள பொருள் பாதுகாப்பு கிடங்கில் வைத்துவிட்டு வீட்டிற்கு சென்றனர். நள்ளிரவு 1 மணி அளவில் மர்ம நபர்கள், அந்த மீன்பிடி வலைகளுக்கு தீ வைத்து எரித்து விட்டு தப்பி ஓடினர்.

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த நல்லவாடு மீனவர்கள், மர்மநபர்களை பிடிப்பதற்காக விரட்டிச்சென்றனர். ஆனால் அவர்கள் தப்பி ஓடிவிட்டனர். இதனை தொடர்ந்து மீனவர்கள், தண்ணீரை ஊற்றியும், மணலை அள்ளிப்போட்டும் தீயை அணைத்தனர். இருப்பினும் மீன்பிடி வலைகள் எரிந்து சேதமானது.

முன்விரோதம் காரணமாக வீராம்பட்டினம் மீனவர்கள் தங்கள் வலைக்கு தீ வைத்ததாக கருதிய மீனவர்கள், ஆயுதங்களுடன் வீராம்பட்டினம் மீனவர்களை தாக்க தயாரானார்கள். இதுபற்றி தகவல் அறிந்ததும் ரெட்டிச்சாவடி போலீஸ் இன்ஸ்பெக்டர் சரஸ்வதி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீனவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

நல்லவாடு மீனவர்கள் திரண்டதை அறிந்த வீராம்பட்டினம் மீனவர்களும் மோதலுக்கு தயாராகும் வகையில் திரண்டனர். இதனால் இரு கிராமங்களை சேர்ந்த மீனவர்களுக்கும் இடையே மோதல் ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டது. பதற்றமான சூழல் நிலவியதால் புதுச்சேரி மாநில போலீஸ் சூப்பிரண்டு வீரபாலகிருஷ்ணன், கடலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சாந்தி ஆகியோர் தலைமையில் 200-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர்.

பிரச்சினைக்கு முடிவு காணும் வகையில் மீனவர்களிடம் போலீசார் அமைதி பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் மீனவர்கள் பேசுகையில், கடந்த 28-ந்தேதி கடல் பகுதியில் மீன் பிடிக்க கூடாது என வீராம்பட்டினத்தை சேர்ந்த மீனவர்கள் எங்களிடம் தகராறு செய்து மோதலில் ஈடுபட்டனர். இது தொடர்பாக புதுச்சேரி மாநில போலீசாருக்கு புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.

இதன் தொடர்ச்சியாக எங்கள் பகுதியில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள வலைகளை வீராம்பட்டினத்தை சேர்ந்த மீனவர்கள் எரித்து சென்று இருக்கலாம் என்று எங்களுக்கு சந்தேகம் உள்ளது. ஆகவே புதுச்சேரி மாநில போலீசார் உடனடியாக நடவடிக்கை எடுத்து சம்பந்தப்பட்ட நபர்களை கைது செய்ய வேண்டும் என்று கூறினர்.

இதனை தொடர்ந்து போலீஸ் சூப்பிரண்டு வீரபாலகிருஷ்ணன் பேசுகையில், கடந்த 28-ந்தேதி நடைபெற்ற மோதல் தொடர்பாகவும், வலைகளை எரித்த குற்றவாளிகளையும் உடனடியாக கைது செய்து நடவடிக்கை எடுக்கப்படும். இது தொடர்பாக வருங்காலங்களில் பிரச்சினை மற்றும் மோதல் சம்பவத்தில் யாரும் ஈடுபடக்கூடாது என அறிவுறுத்தினார்.

இதையடுத்து வலைகள் எரிக்கப்பட்ட பகுதியில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் மோதல் ஏற்படாமல் இருக்க தமிழகம் மற்றும் புதுவை எல்லைப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நல்லவாடு மீனவர்களின் வலைக்கு தீ வைத்தது வீராம்பட்டினத்தை சேர்ந்த கவின் (வயது 25), இனியன் என்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து கவினை வீராம்பட்டினம் மீனவர்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். தலைமறைவாக உள்ள இனியனை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story