ஓட்டப்பிடாரம் அருகே பயங்கரம்: அங்கன்வாடி பெண் ஊழியர் சரமாரி வெட்டிக்கொலை


ஓட்டப்பிடாரம் அருகே பயங்கரம்: அங்கன்வாடி பெண் ஊழியர் சரமாரி வெட்டிக்கொலை
x
தினத்தந்தி 2 Oct 2019 11:30 PM GMT (Updated: 2 Oct 2019 9:41 PM GMT)

ஓட்டப்பிடாரம் அருகே நடத்தையில் சந்தேகத்தால் அங்கன்வாடி பெண் ஊழியரை சரமாரியாக வெட்டிக் கொலை செய்த கணவரை போலீசார் கைது செய்தனர்.

ஓட்டப்பிடாரம், 

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே உள்ள குலசேகரநல்லூரைச் சேர்ந்தவர் முருகன் மகன் லட்சுமணன் (வயது 41). கொத்தனார், இவருடைய மனைவி மகேசுவரி (36). இவர் அங்குள்ள அங்கன்வாடி மையத்தில் உதவியாளராக வேலை செய்து வந்தார்.

இவர்களுக்கு கனகு (12) என்ற மகளும், மகராஜன் (6) என்ற மகனும் உள்ளனர். அங்குள்ள பள்ளிக்கூடத்தில் கனகு 7-ம் வகுப்பும், மகராஜன் 1-ம் வகுப்பும் படித்து வருகின்றனர்.

லட்சுமணனுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது. இதனால் அவர் அடிக்கடி மது குடித்து விட்டு, தன்னுடைய மனைவியிடம் தகராறு செய்து வந்தார். இந்த நிலையில் மகேசுவரி தன்னுடைய உறவினர் ஒருவரிடம் அடிக்கடி செல்போனில் பேசி வந்ததாக கூறப்படுகிறது.

இதனை அறிந்த லட்சுமணன் தன்னுடைய மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு, அவரிடம் அடிக்கடி தகராறு செய்து வந்தார். நேற்று காந்தி ஜெயந்தி விடுமுறையை முன்னிட்டு கணவன்-மனைவி இருவரும் வேலைக்கு செல்லவில்லை. 2 குழந்தைகளும் வீட்டுக்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்தனர்.

அப்போது மதியம் லட்சுமணன் தன்னுடைய மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு மீண்டும் அவரிடம் தகராறு செய்தார். இதனால் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த லட்சுமணன் தனது வீட்டில் உள்ள அரிவாளால் மனைவியை சரமாரியாக வெட்டியதாக கூறப்படுகிறது. இதில் கழுத்து, கை உள்ளிட்ட இடங்களில் பலத்த வெட்டுக்காயம் அடைந்த மகேசுவரி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தார்.

இதையடுத்து லட்சுமணன் தனது வீட்டை வெளிப்புறமாக பூட்டி விட்டு, ஓட்டப்பிடாரம் போலீஸ் நிலையத்துக்கு சென்று சரண் அடைந்தார். அப்போது அவர், தன்னுடைய மனைவியை வெட்டிக் கொலை செய்ததாகவும், மனைவியின் உடல் வீட்டில் கிடப்பதாகவும் கூறி, வீட்டின் சாவியை போலீசாரிடம் ஒப்படைத்தார். இதையடுத்து லட்சுமணனை போலீசார் கைது செய்தனர்.

தொடர்ந்து போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) மணிமொழி, சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். கொலை செய்யப்பட்ட மகேசுவரியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்கள்.

மேலும், இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நடத்தையில் சந்தேகத்தால் அங்கன்வாடி பெண் ஊழியரை கணவரே வெட்டிக் கொலை செய்த பயங்கர சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story