காஞ்சீபுரம் அருகே, கத்தி முனையில் வழிப்பறி செய்த 4 ரவுடிகள் கைது


காஞ்சீபுரம் அருகே, கத்தி முனையில் வழிப்பறி செய்த 4 ரவுடிகள் கைது
x
தினத்தந்தி 2 Oct 2019 11:00 PM GMT (Updated: 2 Oct 2019 10:24 PM GMT)

காஞ்சீபுரம் அருகே வழியில் செல்பவர்களிடம் கத்தியை காட்டி மிரட்டி வழிப்பறி செய்து வந்த 4 ரவுடிகளை போலீசார் கைது செய்தனர்.

காஞ்சீபுரம், 

காஞ்சீபுரம் அருகே உள்ள ஜெ.ஜெ.நகர் பகுதியில் ரவுடிக்கும்பலை சேர்ந்த சிலர் அந்த வழியில் செல்பவர்களிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாக காஞ்சீபுரம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதையொட்டி இன்ஸ்பெக்டர் வெற்றிச்செல்வன், தனிப்பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவக்குமார் உள்ளிட்ட போலீசார் அங்கு சென்று தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கு பதுங்கி இருந்து வழிப்பறியில் ஈடுபட்டு கொண்டிருந்த காஞ்சீ புரம் அடுத்த முசரவாக்கம் பகுதியை சேர்ந்த புஷ்பராஜ் (வயது 21), காஞ்சீபுரம் சிறுகாவேரிப்பாக்கம் ஜே.ஜே. நகரை சேர்ந்த ஆனந்தன் (28), அதே பகுதியை சேர்ந்த வெற்றிவேல் (26), காஞ்சீபுரம் அடுத்த கீழம்பி பகுதியை சேர்ந்த கந்தன் (30) ஆகிய 4 ரவுடிகளை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர்.

பின்னர் அவர்களிடம் விசாரணை நடத்தியதில், அவர்கள் மீது கொலை, கொள்ளை, அடிதடி உள்பட பல்வேறு வழக்குகள் உள்ளது தெரியவந்தது. மேலும் அவர்களிடமிருந்து கத்தி, உருட்டுக் கட்டைகள் ஆகியவற்றையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

அதன் பின்னர் 4 ரவுடிகளையும், காஞ்சீபுரம் குற்றவியல் கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்தினர். இதையடுத்து, அவர்கள் 4 பேரும் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

Next Story