வேலை வாங்கித்தருவதாக மோசடி வாலிபரை காரில் கடத்தி தாக்குதல் 4 பேர் கைது


வேலை வாங்கித்தருவதாக மோசடி வாலிபரை காரில் கடத்தி தாக்குதல் 4 பேர் கைது
x
தினத்தந்தி 3 Oct 2019 10:15 PM GMT (Updated: 3 Oct 2019 5:34 PM GMT)

வேலை வாங்கித்தருவதாக கூறி மோசடி செய்த வாலிபரை கடத்தி தாக்கிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

பூந்தமல்லி,

சென்னை கோயம்பேடு பஸ் நிலையத்தில் நேற்று முன்தினம் இரவு மர்ம கும்பல் ஒன்று வாலிபர் ஒருவரை சரமாரியாக தாக்கி, காரில் ஏற்றிக்கொண்டிருந்தனர். அந்த வாலிபர், தன்னை காப்பாற்றும்படி கூச்சலிட்டார்.

அப்போது அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார், ஓடிச்சென்று அந்த வாலிபரை மீட்டனர். அவரை தாக்கிய மர்மகும்பலில் 4 பேரையும் மடக்கிப்பிடித்தனர். அப்போது அந்த வாலிபர், அவர்கள் தன்னை கடத்திச்செல்வதாக கூறினார்.

மர்ம கும்பல் தாக்கியதால் காயம் அடைந்த அந்த வாலிபரை, சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் பிடிபட்ட 4 பேரையும் கோயம்பேடு போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர்.

அதில், கடத்தப்பட்ட வாலிபர் வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டையை சேர்ந்த விஷ்ணு பிரசாத் (வயது 29) என்பது தெரிந்தது. அவர், வெளிநாட்டில் வேலை வாங்கித்தருவதாக கூறி பலரிடம் பணம் வாங்கி உள்ளார்.

ஆனால் சொன்னபடி பணம் கொடுத்தவர்களுக்கு வெளிநாட்டு வேலையும் வாங்கி தராமல், பணத்தையும் திருப்பி கொடுக்காமல் தலைமறைவாகி விட்டார். இந்தநிலையில் கடந்த 1-ந்தேதி பூந்தமல்லி வந்த அவரை, அவரிடம் பணம் கொடுத்து ஏமாற்றம் அடைந்த இவர்கள் 4 பேரும் சேர்ந்து காரில் கடத்திச்சென்று கோயம்பேடு காளியம்மன் கோவில் தெருவில் உள்ள தனியார் டிராவல்ஸ் அலுவலகத்தில் வைத்து அடித்து உதைத்தனர்.

பின்னர் அவரது தந்தை சம்பந்தனுக்கு போன் செய்து, விஷ்ணுபிரசாத்தை கடத்தி வைத்து உள்ளோம். எங்களிடம் அவர் வாங்கிய பணத்தை திருப்பி கொடுத்தால்தான் அவரை ஒப்படைப்போம் என்று மிரட்டி உள்ளனர்.

இந்தநிலையில் அவரை வேறு ஒரு இடத்துக்கு கடத்தி செல்ல காரில் ஏற்றியபோதுதான் அவர் கூச்சலிட்டதும், போலீசார் மடக்கி பிடித்து மீட்டதும் தெரிந்தது. இதுகுறித்து விஷ்ணுபிரசாத்தை கடத்திய 4 பேரையும் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

இதற்கிடையில் தனது மகன் கடத்தப்பட்டது தொடர்பாக விஷ்ணு பிரசாத்தின் தந்தை சம்பந்தன், ராணிப்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்து இருப்பதாக தெரிகிறது. ஆனால் அவர் கடத்தப்பட்டது பூந்தமல்லி என்பதால் இந்த வழக்கு பூந்தமல்லி அல்லது ராணிப்பேட்டை போலீஸ் நிலையத்துக்கு மாற்றப்படலாம் என்று கோயம்பேடு போலீசார் தெரிவித்தனர்.

Next Story