‘நீட்’ தேர்வில் ஆள்மாறாட்ட விவகாரம்: தவறு செய்தவர்கள் யாரும் தப்பிவிடாமல் அரசு நடவடிக்கை - துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேட்டி


‘நீட்’ தேர்வில் ஆள்மாறாட்ட விவகாரம்: தவறு செய்தவர்கள் யாரும் தப்பிவிடாமல் அரசு நடவடிக்கை - துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
x
தினத்தந்தி 3 Oct 2019 10:15 PM GMT (Updated: 3 Oct 2019 7:02 PM GMT)

‘நீட்’ தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த விவகாரத்தில் தவறு செய்தவர்கள் யாரும் தப்பிவிடாமல் இருக்க அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

தேனி,

தமிழக துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தேனியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி:- நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் நீங்கள் பிரசாரத்தை எப்போது தொடங்க உள்ளர்கள்?

பதில்:- இரு சட்டமன்ற தொகுதியிலும் அடுத்த வாரம் முதல்-அமைச்சரும், நானும் பிரசாரம் செய்வோம்.

கேள்வி:- இந்த 2 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலிலும் அ.தி.மு.க.வுக்கு வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது?

பதில்:- 2 சட்டமன்ற இடைத்தேர்தல்களிலும் பெரும்பான்மையான வாக்குகள் அதிகம் பெற்று மாபெரும் வெற்றியை பெறுவோம்.

கேள்வி:- ‘நீட்’ தேர்வில் ஆள்மாறாட்டம் விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து உங்கள் கருத்து என்ன?

பதில்:- தவறு எங்கு நடந்திருந்தாலும், எப்படி நடந்திருந்தாலும் தவறை கண்டுபிடித்து, தவறு செய்தவர்கள் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தவறு செய்தவர்கள் யாரும் தப்பி விடாமல் இருக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

கேள்வி:- ‘நீட்’ தேர்வு ஆள்மாறாட்ட வழக்கு சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றப்படுமா?

பதில்:- மாநில அரசின் சி.பி.சி.ஐ.டி. பிரிவு உரிய முறையில் தகுந்த விசாரணை நடத்தி, நல்ல தீர்ப்பை பெற்றுக்கொடுக்கும்.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story