புதிய கல்வி கொள்கையை ரத்து செய்ய வேண்டும் கம்யூனிஸ்டு கட்சிகளின் கூட்டத்தில் தீர்மானம்


புதிய கல்வி கொள்கையை ரத்து செய்ய வேண்டும் கம்யூனிஸ்டு கட்சிகளின் கூட்டத்தில் தீர்மானம்
x
தினத்தந்தி 3 Oct 2019 10:45 PM GMT (Updated: 3 Oct 2019 7:11 PM GMT)

புதிய கல்வி கொள்கையை ரத்து செய்ய வேண்டும் என்று கம்யூனிஸ்டு கட்சிகளின் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

திருவாரூர்,

இந்திய கம்யூனிஸ்டு கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிகளின் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் சிவபுண்ணியம் தலைமை தாங்கினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் சுந்தரமூர்த்தி முன்னிலை வகித்தார். இதில் நாகை செல்வராஜ் எம்.பி. கலந்து கொண்டு பேசினார்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

மத்திய அரசின் மக்கள் விரோத, ஜனநாயக விரோத நடவடிக்கையின் காரணமாக பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள், சிறு-குறு தொழில்கள், வனிகர்கள் நெருக்கடிக்கு உள்ளாகியிருப்பதை கண்டித்தும், விவசாயிகளின் பயிர்க் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும்.

ஆர்ப்பாட்டம்

100 நாள் வேலையினை 200 நாளாக உயர்த்த வேண்டும், விடுப்பட்ட விவசாயிகளுக்கு பயிர்க்காப்பீடு இழப்பீட்டு தொகை வழங்க வேண்டும். பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்ப்பதை கைவிட வேண்டும்.

படித்து வேலையில்லா இளைஞர்களுக்கு வேலையில்லா கால நிவாரணம் வழங்க வேண்டும். அனைத்து வகையான தொழிலாளர்களுக்கும் குறைந்தபட்ச ஊதியமாக ரூ.18 ஆயிரம் வழங்க வேண்டும். வயதானவர்களுக்கும், விதவைகளுக்கும் மாதம் ரூ.3 ஆயிரம் வழங்க வேண்டும். மீத்தேன், ஷேல் எரிவாயு திட்டத்தை கைவிட வேண்டும். புதிய கல்வி கொள்கையை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் வருகிற 16-ந்தேதி திருவாரூர் பஸ் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது.

இதில் கட்சியின் செயற்குழு உறுப்பினர் பழனிச்சாமி, முன்னாள் எம்.எல்.ஏ. உலகநாதன், மாவட்ட துணை செயலாளர் ஞானமோகன், விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் மாசிலாமணி, விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் பாஸ்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story