தென்காசி உதவி கலெக்டர் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகை


தென்காசி உதவி கலெக்டர் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகை
x
தினத்தந்தி 3 Oct 2019 9:45 PM GMT (Updated: 3 Oct 2019 8:32 PM GMT)

விவசாய நிலங்களில் கலெக்டர் அலுவலகம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து தென்காசி உதவி கலெக்டர் அலுவலகத்தை விவசாயிகள் நேற்று முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தென்காசி, 

நெல்லை மாவட்டத்தை இரண்டாக பிரித்து தென்காசியை தலைமையிடமாக கொண்டு தனி மாவட்டம் அமைக்க முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். தற்போது மாவட்ட கலெக்டர் அலுவலகம் அமைப்பதற்கான இடம் தேர்வு தீவிரமாக நடைபெற்று வருகிறது. வருவாய் துறையினர் அரசுக்கு சொந்தமான இடம் மற்றும் காலியாக உள்ள இடங்களை ஆய்வுசெய்து கணக்கெடுத்து வருகிறார்கள்.

தென்காசி அருகே உள்ள ஆயிரப்பேரியில் ஏற்கனவே உள்ள அரசுக்கு சொந்தமான 42 ஏக்கர் இடத்தை பயன்படுத்தலாம் என செல்வமோகன்தாஸ் பாண்டியன் எம்.எல்.ஏ. அரசுக்கு பரிந்துரை செய்து உள்ளார். இதற்கிடையே வேறு சில இடங்களையும் அரசு அதிகாரிகள் பார்த்து வருகின்றனர்.

இந்த நிலையில் செங்கோட்டை அருகே உள்ள இலத்தூர் கிராமத்தை சேர்ந்த ஏராளமான விவசாயிகள் நேற்று காலை தென்காசி உதவி கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்து, முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் உதவி கலெக்டரின் நேர்முக உதவியாளர் அருணாச்சலத்திடம் ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

எங்கள் கிராமத்தில் பிள்ளையன்கட்டளைக்கு பாத்தியப்பட்ட உமையன்கால் புரவில் 140 ஏக்கர் விவசாய நிலங்கள் உள்ளன. இதில் அச்சன்புதூர், நெடுவயல், சிவராமபேட்டை, கொடிக்குறிச்சி, அனந்தபுரம், அச்சம்பட்டி ஆகிய பகுதிகளில் உள்ள விவசாயிகள் விவசாயம் செய்து வருகின்றனர். தற்போது இந்த இடத்தில் நில அளவை துறை அதிகாரிகள் அளவு செய்து விவசாயிகளின் முகவரிகளையும் சேகரித்து வருகின்றனர்.

இந்த இடத்தை ஆக்கிரமித்து மாவட்ட கலெக்டர் அலுவலகம் கட்டுவார்கள் என்ற அச்ச உணர்வு எங்களுக்கு ஏற்பட்டுள்ளது. அவ்வாறு கட்டினால் விவசாயிகள் தங்களது வாழ்வாதாரங்களை இழந்து விடுவார்கள். எனவே இந்த இடத்தில் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அமைக்க கூடாது. இதுகுறித்து அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மனுவை பெற்றுக்கொண்ட அருணாச்சலம் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார். அதனை தொடர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

Next Story