கன்னியாகுமரியில் இருந்து காளிமலைக்கு பக்தர்கள் இருமுடி கட்டுடன் புனித பயணம் இல.கணேசன் தொடங்கி வைத்தார்


கன்னியாகுமரியில் இருந்து காளிமலைக்கு பக்தர்கள் இருமுடி கட்டுடன் புனித பயணம் இல.கணேசன் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 3 Oct 2019 11:00 PM GMT (Updated: 3 Oct 2019 9:07 PM GMT)

கன்னியாகுமரியில் இருந்து காளிமலைக்கு பக்தர்கள் இருமுடி கட்டி செல்லும் புனித பயணத்தை இல.கணேசன் தொடங்கி வைத்தார்.

கன்னியாகுமரி,

குமரி மாவட்ட எல்லையான பத்துகாணி காளிமலையில் பத்ரகாளி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் துர்காஷ்டமி திருவிழா நேற்று தொடங்கியது. இந்த திருவிழா 8-ந் தேதி வரை நடக்கிறது.

இதையொட்டி கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலின் முன்பு இருந்து காளிமலைக்கு அலங்கரிக்கப்பட்ட ரதம் முன் செல்ல பக்தர்கள் இருமுடி கட்டி, புனிதநீர் சுமந்து பயணமாக செல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இல.கணேசன்-பொன்.ராதாகிருஷ்ணன் பங்கேற்பு

இதன் தொடக்க விழாவுக்கு முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். காளிமலை அறக்கட்டளை துணை தலைவர் ஸ்ரீகுமார் முன்னிலை வகித்தார். புனித பயணத்தை பா.ஜனதா அகில இந்திய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

வக்கீல் வேணுதாஸ் வரவேற்று பேசினார். குமரி மாவட்ட இந்து முன்னணி துணை தலைவர் எஸ்.பி.அசோகன், மாவட்ட பா.ஜனதா தலைவர் முத்துகிருஷ்ணன், நாகர்கோவில் நகரசபை முன்னாள் தலைவி மீனாதேவ், மாவட்ட துணை தலைவர்கள் தேவ், முத்துராமன், நாகர்கோவில் நகர தலைவர் ராஜன், கன்னியாகுமரி நகர ஆர்.எஸ்.எஸ். பொறுப்பாளர் முருகன், கன்னியாகுமரி நகர சிவசேனா தலைவர் சுபாஷ், மாவட்ட இந்து முன்னணி தலைவர் மிசாசோமன், காளிமலை அறக்கட்டளை தலைவர் ராஜேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். கன்னியாகுமரியில் தொடங்கிய இந்த பயணம் விவேகானந்தபுரம், கொட்டாரம், அச்சன்குளம், பொற்றையடி, சுசீந்திரம், இடலாக்குடி, கோட்டார், மீனாட்சிபுரம், ஒழுகினசேரி, வடசேரி வழியாக நாளை(சனிக்கிழமை) காளிமலை பத்ரகாளி அம்மன் கோவிலை சென்றடைகிறது.


Next Story