ஆரணியில் விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவிகள் - அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் வழங்கினார்


ஆரணியில் விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவிகள் - அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் வழங்கினார்
x
தினத்தந்தி 3 Oct 2019 10:30 PM GMT (Updated: 3 Oct 2019 10:04 PM GMT)

ஆரணியில் விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் வழங்கினார்.

ஆரணி, 

இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகம், கீழ்நெல்லி வேளாண்மை அறிவியல் மையம், மாவட்ட வேளாண்மைத்துறை இணைந்து ஜல்சக்திஅபியான், நீர் மேலாண்மை இயக்கம் சார்பாக உழவர் விழா ஆரணியில் நடந்தது.

கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி தலைமை தாங்கினார். உதவி கலெக்டர் இல.மைதிலி, தூசி கே.மோகன் எம்.எல்.ஏ., நகர கூட்டுறவு வங்கித் தலைவர் அசோக்குமார், வைகை கூட்டுறவு பண்டகசாலை தலைவர் பி.ஆர்.ஜி.சேகர், பட்டு கூட்டுறவு சங்க தலைவர்கள் சேவூர் ஜெ.சம்பத், எஸ்.ஜோதிலிங்கம், சங்கரிபாலசந்தரன், அரையாளம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கித் தலைவர் எம்.வேலு, முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் கோவிந்தராசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கீழ்நெல்லி வேளாண்மை அறிவியல் மைய முதுநிலைதலைவர் ந.ரமேஷ்ராஜா வரவேற்றார்.

சிறப்பு அழைப்பாளராக அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் கலந்து கொண்டு விவசாயிகளுக்கு விதைகள், மின்பொறி விளக்கு, மானிய விலையில் உரங்கள், கடன் அட்டைகள் உள்ளிட்ட நலத்திட்டஉதவிகளை வழங்கி பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது:-

ஜல்சக்திஅபியான் நீர் மேலாண்மை இயக்கம் மூலம் நீர் பாதுகாப்பு, மழைநீர் சேகரிப்பு, மரக்கன்றுகள் நடுவது உள்பட பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் ஒருபகுதியாக விவசாயிகளுக்கு நீர் மேலாண்மை தொழில்நுட்பங்கள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்த உழவர் விழா நடத்தப்பட்டு வருகிறது. இதற்காக நீர் வங்கி என்ற திட்டத்தை கலெக்டர் தொடங்கியுள்ளார். அதற்காக ரூ.2 லட்சத்தை நானும் வழங்கியுள்ளேன்.

நமது மாவட்டம் கடந்த 2017-18-ம் ஆண்டில் 7 லட்சத்து 43 மெட்ரிக் டன் அரிசி உற்பத்தி செய்து டெல்டா மாவட்டத்தை காட்டிலும் அதிகம் அரிசி உற்பத்தி செய்து பெருமை சேர்த்துள்ளது.

நமது மாவட்டத்தில் குடிமராமத்து திட்டத்தின் கீழ் 32 ஏரிகள், 5 அணைக்கட்டுகள் ரூ.16 கோடி 7 லட்சம் மதிப்பீட்டில் புனரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் 12 ஆயிரத்து 213 ஏக்கர் பாசன நிலங்கள் பயன்பெறும். நடப்பு ஆண்டில் 429 சிறு பாசனஏரிகள், 1,094 குளங்கள், ஊரணிகள் குடி மராமத்து திட்டத்தின் கீழ் ஊரகப்பகுதிகளில் புனரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக ரூ.32 கோடியே 39 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் அரங்கில் வேளாண்மை விரிவாக்க திட்டங்கள், விவசாயிகளுக்கு கடன் அட்டைகள் வழங்குதல், ஜல்சக்திஅபியான் திட்டத்தின் மூலம் சொட்டுநீர் பாசனம் செய்வதால் சேமிக்கும் விவரங்கள், 60 வயது நிறைந்த விவசாயிகளுக்கு மாதந்தோறும் 3 ஆயிரம் ஓய்வூதியம் பெறும் திட்டம், வீடுகளில் மழைநீர் சேகரிப்பு, தோட்டக்கலை, மண்வளத்தின் தொழில்நுட்பங்கள் உள்ளிட்டஅரங்குகள் நிறைந்திருந்தன.

அரசின் சாதனைகள், துறைகள் செயல்பாடுகள் குறித்த துண்டு பிரசுரங்கள் விவசாயிகளுக்கும், பொதுமக்களுக்கும் வழங்கி விளக்கம் அளிக்கப்பட்டு, கருத்தரங்கமும் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் மாவட்ட வன அலுவலர் ஆர்.கிருபாசங்கர், வேளாண் பொறியியல் துறை செயற்பொறியாளர் கலைவாணி, வேளாண் இணைஇயக்குனர் ஜி.துரைசாமி, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் மெய்யழகன், தோட்டக்கலை துணை இயக்குனர் எம்.கண்ணன், பட்டு வளர்ச்சித் துறை உதவிஇயக்குனர் சி.ராமலிங்கம், வேளாண் பேராசிரியர்கள் டி.பரசுராமன், பி.நாராயணன், வெ.சுரேஷ் உள்ளிட்ட அரசுத்துறை அலுவலர்கள், அ.தி.மு.க. மாவட்ட துணை செயலாளர் டி.கருணாகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் கீழ்நெல்லி வேளாண் அறிவியல் மைய தொழில்நுட்ப வல்லுனர் த.மார்கரெட் நன்றிகூறினார்.

Next Story