மாணவ, மாணவிகள் ஏரி, குளங்களுக்கு குளிக்க செல்லக்கூடாது - மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவுரை


மாணவ, மாணவிகள் ஏரி, குளங்களுக்கு குளிக்க செல்லக்கூடாது - மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவுரை
x
தினத்தந்தி 3 Oct 2019 10:15 PM GMT (Updated: 3 Oct 2019 10:04 PM GMT)

மாணவ, மாணவிகள் ஏரிகள், குளங்களில் குளிக்க செல்லக்கூடாது என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவுரை வழங்கினார்.

கிருஷ்ணகிரி, 

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 8 நாட்களில் 11 மாணவ, மாணவிகள் ஏரி, குளங்களில் குளிக்கும் போது நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இதையொட்டி மாவட்ட நிர்வாகம் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி, கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நேற்று, மாணவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி தலைமை தாங்கினார். தலைமை ஆசிரியர் சேரலாதன் வரவேற்றார்.

நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி பேசியதாவது:-

காலாண்டு விடுமுறை என்பது தேர்வு எழுதிய மாணவர்கள் ஓய்வு எடுத்து, தங்களை புதுப்பித்துக் கொள்ளவும், ஆசிரியர்கள் தேர்வு தாள்களை திருத்தவும் ஏற்படுத்தப்பட்டது. ஆனால் அந்த நாட்களில் மாணவ, மாணவிகள் ஏரி, குளம் மற்றும் குட்டைகளில் குளிக்கும் போது அசம்பாவிதங்கள் ஏற்படுகிறது. நமது மாவட்டத்தில் 8 நாட்களில் 11 மாணவ, மாணவிகள் ஏரி, குளங்களில் குளிக்கும் போது நீரில் மூழ்கி இறந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது மாவட்டம் முழுவதும் ஏரி, குளம் மற்றும் குட்டைகள் தூர்வாரப்பட்டுள்ளதால் மழை பெய்து தண்ணீர் தேங்கியுள்ளது. அதில் எவ்வளவு ஆழம் இருக்கும் என்று நமக்கு தெரியாது. நீச்சல் தெரிந்திருந்தாலும், ஆழம் தெரியாமல் இறங்கி குளிக்கும் போது சேற்றில் சிக்கியும், ஆழத்தில் மாட்டிக் கொண்டும் மாணவ, மாணவிகள் உயிரிழக்கின்றனர். எனவே, நீர் நிலைகளில் கண்டிப்பாக குளிக்க செல்லக் கூடாது. மாறாக, அவரவர் வீடுகளில் மட்டுமே குளிக்க வேண்டும். இது குறித்து அக்கம், பக்கம் வீடுகளில் உள்ள மாணவ, மாணவிகள் மற்றும் சிறுவர்களுக்கு எடுத்து சொல்ல வேண்டும். பெரியவர்கள் துணிகளை துவைக்கவும் செல்லக்கூடாது. மனித உயிர் விலை மதிப்பிலாதது. அவற்றை நாம் பேணிக்காத்து நாட்டிற்கு நன்மை செய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியின் போது குளம், குட்டைகளில் குளிக்க மாட்டோம் என மாணவர்கள் உறுதிமொழி ஏற்றனர். இதில் உதவி தலைமை ஆசிரியர்கள் வேந்தன், பத்மாவதி, ரமேஷ்பாபு உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story