கடலூர், வேலையில்லாத சிறுபான்மையினருக்கு இலவச திறன் வளர்ப்பு பயிற்சி - கலெக்டர் அன்புசெல்வன் தகவல்


கடலூர், வேலையில்லாத சிறுபான்மையினருக்கு இலவச திறன் வளர்ப்பு பயிற்சி - கலெக்டர் அன்புசெல்வன் தகவல்
x
தினத்தந்தி 4 Oct 2019 10:15 PM GMT (Updated: 4 Oct 2019 1:02 PM GMT)

வேலையில்லாத சிறுபான்மையினருக்கு இலவச திறன் வளர்ப்பு பயிற்சி அளிக்கப்பட உள்ளதாக மாவட்ட கலெக்டர் அன்புசெல்வன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கடலூர்,

தேசிய சிறுபான்மையினர் வளர்ச்சி மற்றும் நிதிக்கழகத்தின் நிதி உதவியுடன் டாம்கோ மூலம் படித்து வேலையில்லாத சிறுபான்மையின வகுப்பை சேர்ந்த இளைஞர்களுக்கு திருவள்ளூர் மாவட்டத்தில் செயல்படும் ஆயத்த ஆடை பயிற்சி மற்றும் வடிவமைப்பு மையத்தின் மூலம் இலவச திறன் வளர்ப்பு பயிற்சி வழங்குவதற்கும், பயிற்சிக்கு பிறகு வேலைவாய்ப்பு பெறுவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளது. இத்திட்டத்தின் கீழ் எம்பிராய்டரி பயிற்சிக்கு 50 பயனாளிக்கு 3 மாதம் நடத்தப்பட உள்ளது.

இத்திட்டத்தின் கீழ் மதவழி சிறுபான்மையினர் வகுப்பை சேர்ந்த இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள், புத்த மதத்தினர், சீக்கியர்கள், பார்சியர்கள் மற்றும் ஜெயின் பிரிவை சேர்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.5 லட்சத்திற்கு மிகாமலும், 18 முதல் 55 வயதுக்குட்பட்டவர்களாகவும் இருக்க வேண்டும். பயிற்சியின் போது ஒரு பயனாளிக்கு ரூ.1,000 உதவித்தொகை வழங்கப்படும். உண்டு உறைவிட கட்டணம் ஏதும் வழங்கப்படமாட்டாது.

இதற்கான நேர்காணல், திருவள்ளூர் மாவட்டத்தில், எண்.1-டி, முதல் குறுக்கு தெரு, சி.வி. நாயுடு தெரு, ஜெயா நகர், திருவள்ளூர் மாவட்டம் என்ற முகவரியில் உள்ள ஆயத்த ஆடை பயிற்சி மற்றும் வடிவமைப்பு மையத்தில் இன்று (வியாழக்கிழமை) காலை 11 மணி முதல் நடைபெற உள்ளது. மேற்படி திட்டத்தின் கீழ் பயிற்சி பெற விரும்புவோர் அசல் சாதி சான்றிதழ், வருமானச் சான்றிதழ், ஆதார் அட்டை, கல்வி சான்றிதழ் ஆகிய சான்றிதழ்களுடன் நேர்காணலில் கலந்து கொள்ளலாம். இப்பயிற்சி திட்டத்தில் சிறுபான்மையின இளைஞர்கள் சேர்ந்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மேலும் இது தொடர்பான விவரங்களுக்கு சம்மந்தப்பட்ட மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் அல்லது, ஆயத்த ஆடை பயிற்சி மற்றும் வடிவமைப்பு மையம் (ஏ.டிடி.சி) (எவரஸ்ட், உதவி மண்டல மேலாளர் 93805 13874) அல்லது தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம், சென்னை, (டெலிபோன் எண் 044-28514846) ஆகியோரை அணுகலாம்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. 


Next Story