லாரி-மினிவேன் மோதி விபத்து; 13 பெண்கள் உள்பட 21 பேர் படுகாயம்


லாரி-மினிவேன் மோதி விபத்து; 13 பெண்கள் உள்பட 21 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 4 Oct 2019 11:00 PM GMT (Updated: 4 Oct 2019 6:34 PM GMT)

காஞ்சீபுரம் அருகே லாரி மீது மினி வேன் ஒன்று மோதிய விபத்தில், வேனில் இருந்த 13 பெண்கள் உள்பட 21 பேர் படுகாயம் அடைந்தனர்.

காஞ்சீபுரம் ,

காஞ்சீபுரம் அருகே உள்ள தாமலில் இருந்து கிளம்பிய லாரி ஒன்று, சென்னை- பெங்களூரூ தேசிய நெடுஞ்சாலையில் நேற்று காலை 8 மணியளவில் சென்று கொண்டிருந்தது. இந்நிலையில், திருப்புகுழி ஆரம்ப சுகாதார நிலையம் அருகே லாரி வந்தபோது, வேலூர் மாவட்டம் ராணிப்பேட்டையில் இருந்து மாங்கால் கூட்ரோட்டுக்கு வந்த மினிவேன் ஒன்று லாரியின் பின்னால் கண்ணிமைக்கும் நேரத்தில் பயங்கரமாக மோதியது. இதில், வேனில் பயணம் செய்த 13 பெண்கள் உள்பட 21 பேர் படுகாயம் அடைந்தனர்.

உடனடியாக அக்கம்பக்கத்தினர் உதவியுடன் ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து, அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு, காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.

இது குறித்து தகவல் கிடைத்ததும், பாலுச்செட்டி சத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெற்றிச்செல்வன் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார். மேலும் இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story