கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த சிறுவனுக்கு அஞ்சலி


கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த சிறுவனுக்கு அஞ்சலி
x
தினத்தந்தி 4 Oct 2019 10:30 PM GMT (Updated: 4 Oct 2019 7:23 PM GMT)

திருமானூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த சிறுவனுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

கீழப்பழுவூர்,

அரியலூர் மாவட்டம், திருமானூரை சேர்ந்த சுப்ரமணியம்- நதியா தம்பதிகளின் மகன் ஜெயசூர்யா(வயது 10). இவர் கடந்த ஆண்டு திருமானூர் கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி உயிரிழந்தான். அவன் உயிரிழந்ததற்கு அப்பகுதியில் பல ஆண்டுகளாக செயல்பட்டு வந்த மணல் குவாரிகளால் ஏற்பட்ட பள்ளமே என அப்பகுதி மக்கள் மணல் குவாரியை மூட வலியுறுத்தி பலகட்ட போராட்டங்களை நடத்தியது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து மணல் குவாரியும் மூடப்பட்டது. 

இந்நிலையில் இறந்த அந்த சிறுவனுக்கு முதலாம் ஆண்டு நினைவு நாள் நேற்று அந்த சிறுவன் பயின்ற திருமானூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் அனுசரிக்கப்பட்டது இதில் சிறுவனின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர் பள்ளி மாணவர்களுக்கும், பொதுமக்களுக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. 

இதில் மகிளா காங்கிரஸ் மாவட்ட தலைவி மாரியம்மாள், அ.ம.மு.க. கட்சியின் ஒன்றிய செயலாளர்கள் வடிவேல்முருகன், ஜெயபிரகா‌‌ஷ், தலைமையாசிரியர் லதா, கொள்ளிடம் நீர் ஆதார பாதுகாப்பு குழுவினர் திருநாவுக்கரசு, பாஸ்கர் மற்றும் சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Next Story