சென்னை விமான நிலையத்தில் ரூ.30 லட்சம் தங்கம் பறிமுதல்


சென்னை விமான நிலையத்தில் ரூ.30 லட்சம் தங்கம் பறிமுதல்
x
தினத்தந்தி 4 Oct 2019 10:15 PM GMT (Updated: 4 Oct 2019 8:40 PM GMT)

சென்னை விமான நிலையத்தில் துபாயில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.30 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 2 பேரிடம் விசாரித்து வருகின்றனர்.

ஆலந்தூர்,

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு வெளிநாடுகளில் இருந்து வரும் விமானங்களில் பெரும் அளவில் கடத்தல் பொருட்கள் கொண்டு வரப்படுவதாக விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகளுக்கு ரகசிய தகவல்கள் கிடைத்தது. இதையடுத்து விமான நிலையத்தில் சுங்க இலாகா அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு இருந்தனர்.

அப்போது துபாயில் இருந்து சென்னைக்கு வந்த விமானத்தில் பயணம் செய்த ராமநாதபுரத்தை சேர்ந்த முகமது கனி (வயது 38) என்பவர் மீது சந்தேகம் அடைந்த சுங்க இலாகா அதிகாரிகள், அவரை நிறுத்தி விசாரித்தனர். அதிகாரிகளிடம் அவர், முன்னுக்குப்பின் முரணாக பேசியதால் அவரது உடைகளை சோதனை செய்தனர்.

அதில் 6,400 வெளிநாட்டு சிகரெட்டுகளை மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர். மேலும் அவரை தனியறைக்கு அழைத்துச்சென்று சோதனை செய்தனர்.

அவர் உள்ளாடைக்குள் தங்கத்தை மறைத்து கடத்தி வந்ததும் தெரிந்தது. இதையடுத்து ரூ.12 லட்சத்து 20 ஆயிரம் மதிப்புள்ள 307 கிராம் தங்கத்தையும், ரூ.64 ஆயிரம் மதிப்புள்ள வெளிநாட்டு சிகரெட்டுகளையும் சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

அதேபோல் துபாயில் இருந்து சென்னைக்கு மற்றொரு விமானத்தில் வந்த ராமநாதபுரத்தை சேர்ந்த முகமது அன்சாரி (28) என்பவரை சந்தேகத்தின் பேரில் தனியறைக்கு அழைத்துச்சென்று சோதனை செய்தனர்.

அதில் அவர், உள்ளாடைக்குள் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர். அவரிடம் இருந்து ரூ.17 லட்சத்து 80 ஆயிரம் மதிப்புள்ள 455 கிராம் தங்கத்தை கைப்பற்றினார்கள்.

சென்னை விமான நிலையத்தில் 2 பேரிடம் இருந்து ரூ.30 லட்சம் மதிப்புள்ள 762 கிராம் தங்கமும், ரூ.64 ஆயிரம் மதிப்புள்ள சிகரெட்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக பிடிபட்ட 2 பேரிடமும் சுங்க இலாகா அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

Next Story