தாராபுரத்தில் பெண் கொலை வழக்கில் கட்டிட மேஸ்திரி கைது


தாராபுரத்தில் பெண் கொலை வழக்கில் கட்டிட மேஸ்திரி கைது
x
தினத்தந்தி 4 Oct 2019 11:00 PM GMT (Updated: 4 Oct 2019 8:50 PM GMT)

தாராபுரத்தில் பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில் கட்டிட மேஸ்திரியை போலீசார் கைது செய்தனர்.

தாராபுரம்,

தாராபுரம் கூடல்மாநகர் வீட்டுமனைப்பிரிவில், கடந்த மாதம் 29-ம் தேதி, ஒரு பெண் கொலை செய்யப்பட்டு கிடப்பதாக, அலங்கியம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அங்கு சென்று அந்த பெண்ணின் உடலை கைப்பற்றி நடத்திய விசாரணையில் அந்த பெண் தாராபுரம், வீராச்சிமங்கலம் அருகே உள்ள எல்லப்பநாயக்கன்வலசை சேர்ந்த ரங்கராஜன் என்பவரின் மனைவி மகாலட்சுமி (வயது 40) என்பதும். இவருக்கு 2 மகள்கள் இருப்பதும் தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் கொலையாளியை கண்டு பிடிப்பதில் தீவிரம் காட்டினார்கள். சில தகவல்களின் அடிப்படையில், நேற்று காலை தாராபுரம் தளவாய்பட்டிணம் அருகே உள்ள ரஞ்சிதாபுரம் பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த, அதே பகுதியைச் சேர்ந்த கட்டிட மேஸ்திரி கருப்புச்சாமி என்கிற சின்னப்பன் (46) என்பவரை, அழைத்து வந்து போலீசார் விசாரணை நடத்தினார்கள். அதில் மகாலட்சுமியை கருப்புச்சாமி கொலை செய்தது தெரியவந்தது. எனவே போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இது தொடர்பாக போலீசார் கூறியதாவது:-

கருப்புச்சாமி கட்டிட மேஸ்திரியாக வேலை செய்து வந்துள்ளார். மகாலட்சுமி சித்தாளாக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு, கருப்புச்சாமியிடம் மகாலட்சுமி கட்டிட வேலைக்காக சேர்ந்துள்ளார். அப்போது இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கமானது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. கருப்புச்சாமிக்கு ஏற்கனவே திருமணமாகி தனலட்சுமி என்கிற மனைவி உள்ளார். இவர்களுக்கு குழந்தைகள் இல்லை.

இந்த நிலையில் கருப்புச்சாமியின் மீது இருந்த மோகத்தால், மகாலட்சுமி கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு தனது கணவரையும், குழந்தைகளையும் விட்டு பிரிந்து வந்து, கருப்புச்சாமியுடன் சேர்ந்து சில காலம் தனியாக வாழ்ந்து வந்துள்ளார். இவர்களுடைய கள்ளக்காதல் கருப்புச்சாமியின் மனைவி தனலட்சுமிக்கு தெரிந்தபோது, குடும்பத்தில் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. அப்போது கருப்புச்சாமி தனது மனைவியிடம் லாவகமாக பேசி, அவரை சமாதானம் செய்ததோடு, கள்ளக்காதலியான மகாலட்சுமியை தனது வீட்டிலேயே மனைவியுடன் சேர்ந்து வைத்துக் கொண்டார்.

கடந்த 3 மாதங்களுக்கு முன்பு கருப்புச்சாமிக்கும் மகாலட்சுமிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால் மகாலட்சுமி கருப்புசாமியை விட்டு பிரிந்து சென்று, மதுக்கம்பாளையம் பிரிவில் உள்ள தனது தாய் வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்த நிலையில் கருப்புச்சாமி அடிக்கடி மகாலட்சுமியை சந்தித்து தன்னுடன் வந்து வாழும்படி கேட்டுள்ளார். அதற்கு மகாலட்சுமி மறுத்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த கருப்புச்சாமி, மகாலட்சுமியை கொலை செய்துவிட திட்டமிட்டுள்ளார். அதற்கான சந்தர்ப்பத்தை எதிர்பார்த்து காத்திருந்தார்.

இந்த நிலையில் கடந்த மாதம் 27-ம் தேதி மாலை, மகாலட்சுமி வேலைக்குச் சென்றுவிட்டு, தனியே வீட்டிற்கு திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த கருப்புச்சாமி, மகாலட்சுமியை தடுத்து நிறுத்தி, அவரிடம் ஆசை வார்த்தைகளை பேசியுள்ளார். பின்னர் அவர் மகாலட்சுமியை மோட்டார்சைக்கிளில் ஏற்றிக்கொண்டு, கூடல்மாநகர் வீட்டுமனைப் பிரிவுக்குச் சென்றுள்ளார். அங்கு இருவரும் உல்லாசமாக இருந்துள்ளனர். தன்னை ஏமாற்றிவிட்டு பிரிந்து சென்றதை நினைத்த கருப்புச்சாமிக்கு மகாலட்சுமி மீது கோபம் ஏற்பட்டுள்ளது. உடனே அவர் மகாலட்சுமியின் கழுத்தை நெரித்து கொலை செய்தார்.

அதன் பிறகு மகாலட்சுமியை யாருக்கும் அடையாளம் தெரிந்துவிடக் கூடாது என்பதற்காக, மறைத்து வைத்திருந்த ஆசிட்டை எடுத்து, மகாலட்சுமியின் முகத்திலும் தலையிலும் ஊற்றிவிட்டு, மகாலட்சுமியின் உடலை தூக்கிச் சென்று, அருகே இருந்த புதருக்குள் வீசிவிட்டு சென்றது தெரியவந்தது.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story