மத்திய அரசை நாங்கள் பகைத்தால் பா.ஜனதாவுடன் கூட்டணி சேர தி.மு.க. தயாராக உள்ளது - அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேச்சு


மத்திய அரசை நாங்கள் பகைத்தால் பா.ஜனதாவுடன் கூட்டணி சேர தி.மு.க. தயாராக உள்ளது - அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேச்சு
x
தினத்தந்தி 4 Oct 2019 11:15 PM GMT (Updated: 4 Oct 2019 10:01 PM GMT)

மத்திய அரசை நாங்கள் பகைத்துக்கொண்டால் பா.ஜனதாவுடன் கூட்டணி சேர தி.மு.க. தயாராக உள்ளது என்று அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி கூறினார்.

காரியாபட்டி,

விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகே உள்ள வீரசோழனில் அ.தி.மு.க. திருச்சுழி சட்டமன்ற தொகுதி சார்பாக அண்ணா பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. மாநில சிறுபான்மை பிரிவு துணைத்தலைவர் மற்றும் மாவட்ட அச்சகத்தலைவர் சித்திக் தலைமை தாங்கினார். சாத்தூர் ராஜவர்மன் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி கலந்து கொண்டு பேசியதாவது:-

இளைய சமுதாயம் விரும்பி வந்து சேரும் இயக்கமாக அ.தி.மு.க. விளங்குகிறது. அனைத்து தேர்தலிலும் அ.தி.மு.க. வெற்றி பெறும். நடைபெற இருக்கிற நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலிலும் அமோக வெற்றி பெறும்.

மத்திய அரசை நாங்கள் பகைத்தால் பா.ஜனதாவுடன் கூட்டணி அமைக்க தி.மு.க. தயாராக உள்ளது. உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க. அனைத்து இடங்களையும் கைப்பற்றும். மக்கள் மனமாற்றத்தில் உள்ளனர்.

காங்கிரஸ் கட்சியினர் என் உருவ பொம்மையை எரிக்கிறார்கள். எரியுங்கள் எனக்கு கண் திருஷ்டி அதிகம் உள்ளது. எனவே எரித்துக் கொள்ளட்டும். சேர, சோழ, பாண்டியர் கால ஆட்சியை போல முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க. ஆட்சியை நடத்தி வருகிறார். விருதுநகர் மாவட்டத்தில் குடிமராமத்து பணிகளுக்காக அதிக நிதி ஒதுக்கப்பட்டு, ஏராளமான கண்மாய், குளங்கள் தூர்வாரப்பட்டு வருகின்றன.

வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள அனைத்து பொதுமக்களுக்கும் ரூ.2ஆயிரம் வழங்க கணக்கெடுப்பு பணி நடைபெற்று வருகிறது. அ.தி.மு.க. மக்களுக்காக உழைக்கிற கட்சி. ஆனால் தி.மு.க. கடந்த தேர்தலில் பொய்யான வாக்குறுதிகளை கூறி வாக்கு பெற்றுவிட்டது. இஸ்லாமியர்களை காக்கும் கட்சியாக அ.தி.மு.க. உள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் நரிக்குடி கிழக்கு ஒன்றிய செயலாளர் அம்மன்பட்டி ரவிச்சந்திரன், மேற்கு ஒன்றிய செயலாளர் பூமிநாதன், காரியாபட்டி மேற்கு ஒன்றிய செயலாளர் ராமமூர்த்திராஜ், கிழக்கு ஒன்றிய செயலாளர் முருகன், திருச்சுழி தெற்கு ஒன்றிய செயலாளர் முத்து ராமலிங்கம், வடக்கு ஒன்றிய செயலாளர் முனியாண்டி, அண்ணா தொழிற்சங்க போக்குவரத்து பிரிவு மாநில துணைச்செயலாளர் வீரேசன், மாவட்ட பொருளாளர் சித்தனேந்தல் கூத்தபெருமாள், மாவட்ட பேரவை பொருளாளர் மச்சேஸ்வரன், ஒன்றிய பேரவை செயலாளர் தியாகராஜன், முன்னாள் ஒன்றிய செயலாளர் அம்பலம், நரிக்குடி ஒன்றிய எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளர் வீரமணிகண்டன், மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு பண்டகசாலை தலைவர் சரவணன், தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட பொருளாளர் கவுதம்ராஜா, தச்சனேந்தல் சந்திரன், ஓட்டங்குளம் வீரபாண்டி, வீரசோழன் ஊராட்சி செயலாளர் திருமூர்த்தி, கல்விமடை வினோத், நரிக்குடி துரைச்சாமி பாண்டியன், காரியாபட்டி முத்துசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story