‘தமிழகத்தில் விபத்தினால் ஏற்பட்ட ஆட்சி விரைவில் தூக்கி எறியப்படும்’ - கனிமொழி எம்.பி. பேச்சு


‘தமிழகத்தில் விபத்தினால் ஏற்பட்ட ஆட்சி விரைவில் தூக்கி எறியப்படும்’ - கனிமொழி எம்.பி. பேச்சு
x
தினத்தந்தி 5 Oct 2019 11:30 PM GMT (Updated: 5 Oct 2019 6:31 PM GMT)

தமிழகத்தில் விபத்தினால் ஏற்பட்ட ஆட்சி விரைவில் தூக்கி எறியப்படும் என்று விக்கிரவாண்டி தொகுதி தேர்தல் பிரசாரத்தில் கனிமொழி எம்.பி. பேசினார்.

விழுப்புரம்,

விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் புகழேந்தியை ஆதரித்து நேற்று மாலை மூங்கில்பட்டு, மதுரப்பாக்கம், ராதாபுரம், தொரவி, பனையபுரம், முண்டியம்பாக்கம் ஆகிய இடங்களில் தி.மு.க. மாநில மகளிர் அணி செயலாளர் கனிமொழி எம்.பி. வேன் மூலம் பிரசாரம் செய்தார். அப்போது பொதுமக்களிடம் உதயசூரியன் சின்னத்தில் வாக்குகளை சேகரித்து அவர் பேசியதாவது:-

இதுநாள் வரை தொகுதி பக்கமே எட்டி பார்க்காத அமைச்சர்கள் இன்றைக்கு இங்கு வந்திருக்கிறார்கள். இடைத்தேர்தலுக்கு மட்டும்தான் அ.தி.மு.க. அமைச்சர்கள் வருவார்கள். இத்தனை நாள் ஏன் வரவில்லை?. ரேஷன் கடையில் பொருட்கள் போடாதது பற்றியும், முதியோர் உதவித்தொகை வழங்கப்படாதது குறித்தும் அவர்கள் கவலைப்படுவதில்லை. ஆனால் தேர்தல் நேரத்தில் வந்து சாலை வசதி வேண்டுமா, குடிநீர் வசதி வேண்டுமா, இன்னும் என்னென்ன வசதிகள் வேண்டும் என்று கேட்கிறார்கள். இவற்றையெல்லாம் பார்த்து மக்கள் ஏமாற மாட்டார்கள்.

தமிழகத்தில் நடைபெற்று வரும் ஆட்சிக்கு பாஸ் மார்க் போட முடியாது. ஏனெனில் எடப்பாடி பழனிசாமிக்கு நாமெல்லாம் ஓட்டுப்போடவில்லை. ஒரு விபத்து நடந்துவிட்டது. அதன் பிறகு பலர் முதல்-அமைச்சராக முயற்சி செய்தனர். ஆனால் எடப்பாடி பழனிசாமிதான் முதல்-அமைச்சரானார். இவரது ஆட்சியால் தமிழகத்திற்கு எந்தவித பயனும் இல்லை.

தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சி நடக்கவில்லை. பா.ஜனதா ஆட்சி நடக்கிறது. மோடி வருகிறார் என்று கோர்ட்டு வரை சென்று அவரை வரவேற்க பேனர் வைக்கிறார்கள். நீட் தேர்வு, இந்தி திணிப்பை எதிர்த்து போராடவில்லை. ஆனால் மோடியை வரவேற்க பேனர் வைப்பதற்கு இந்த ஆட்சி நீதிமன்றம் செல்கிறது. இதையெல்லாம் மக்கள் சிந்தித்து பார்க்க வேண்டும்.

தமிழகத்தில் இன்னும் 1½ ஆண்டுகளில் சட்டமன்ற பொதுத்தேர்தல் வர உள்ளது. அப்போது விபத்தினால் ஏற்பட்ட ஆட்சி தூக்கி எறியப்படும். மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. ஆட்சி மலரும். பெண்கள் வாழ்க்கையில் முன்னேற சுய உதவிக்குழுவை கொண்டு வந்தவர் கருணாநிதி. இதுதவிர மகப்பேறு உதவித்தொகை, சமையல் கியாஸ் அடுப்பு, சொத்தில் பெண்களுக்கு சம பங்கு உரிமை இவற்றையெல்லாம் வழங்கியவர் கருணாநிதி. அவரது ஆட்சி மீண்டும் மலரும். அந்த வாய்ப்பை மு.க.ஸ்டாலின் உருவாக்கி தருவார்.

அடுத்த ஆட்சி நிச்சயம் தி.மு.க. ஆட்சிதான். அப்போது பெண்களின் வாழ்க்கைத்தரம் முன்னேறும். இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும். குடிநீர் பிரச்சினை உள்ளிட்ட மக்களின் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு ஏற்படும். அதற்கு அச்சாரமாக இந்த இடைத்தேர்தலில் அ.தி.மு.க.விற்கு சவுக்கடி கொடுக்கிற வகையில் தி.மு.க. வேட்பாளர் புகழேந்தியை வெற்றி பெற வைக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். இதில் ஜெகத்ரட்சகன் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் பொன்முடி, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், விக்கிரவாண்டி கிழக்கு ஒன்றிய செயலாளர் கள் வேம்பிரவி, ஜெயரவிதுரை உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Next Story