வீட்டு வசதி வாரிய ஒதுக்கீடுதாரர்கள் வங்கி மூலம் தவணை செலுத்த புதிய வசதி


வீட்டு வசதி வாரிய ஒதுக்கீடுதாரர்கள் வங்கி மூலம் தவணை செலுத்த புதிய வசதி
x
தினத்தந்தி 5 Oct 2019 10:45 PM GMT (Updated: 5 Oct 2019 10:31 PM GMT)

வீட்டு வசதி வாரிய ஒதுக்கீடுதாரர்கள் வங்கி மூலம் தவணை செலுத்த புதிய வசதி செய்யப்பட்டு உள்ளது.

மதுரை,

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் உச்சப்பட்டி தோப்பூர் துணை கோள் நகர கோட்ட செயற்பொறியாளர் இருளப்பன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் உச்சப்பட்டி பகுதி-2 மற்றும் தன்னிறைவு வீட்டு மனை திட்டப்பகுதியில் தவணை முறையில் மனை, நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. இந்த ஒதுக்கீடு பெற்றவர்கள் மாத தவணையை நேஷனல் ஆட்டோமேட்டிக் கிளியரிங் ஹவுஸ் (என்.எ.சி.எச் பேமண்ட்) முறையில் பணம் செலுத்துவதற்கு ஏதுவாக தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் தற்போது இந்தஸ் வங்கியுடன் இணைந்து செயல்படுகிறது. ஒதுக்கீடுதாரர்கள் மற்றும் வாடகைதாரர்கள் வங்கியில் பெற்ற வீட்டுக்கடன், வாகன கடன் போன்றவற்றை தானியங்கி முறையில் செலுத்துவது போல் வீட்டு வசதி வாரியத்திற்கும் பணம் செலுத்தலாம்.

இந்த திட்டம் தற்போது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. இந்த திட்டத்தில் இணைவதன் மூலம் தங்களது தவணை மற்றும் வாடகை தொகையை எந்தவித விடுதலுமின்றி சரியாக செலுத்த முடியும். அதன் மூலம் அபராத வட்டி தவிர்க்கப்படுகிறது. இந்த திட்டம் தொடர்பான விழிப்புணர்வு கூட்டம் வருகிற 12-ந் தேதி காலை 11 மணிக்கு எல்லீஸ் நகரில் உள்ள உச்சப்பட்டி-தோப்பூர் நகர கோட்ட அலுவலகத்தில் நடைபெற உள்ளது. எனவே இந்த கூட்டத்தில் கலந்துகொண்டு பயன் பெற வேண்டும்.

அதே போல் வீட்டு வசதி வாரியத்தின் பிற பகுதிகளில் வீடுகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்பு பெற்று இருப்பவர்கள் நேஷனல் ஆட்டோமேட்டிக் கிளியரிங் ஹவுஸ் (என்.எ.சி.எச் பேமண்ட்) முறையில் பணம் செலுத்துவதற்கு ஐ.டி.பி.ஐ. வங்கியுடன் வசதிகள் செய்யப்பட்டுள்ளது. பிற வங்கிகளில் உள்ள கணக்குகள் மூலமும் பணம் செலுத்த முடியும். இதுதொடர்பாக வருகிற 12-ந் தேதி நடக்கும் ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொண்டு பயன் பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story