திருவள்ளூர் பூண்டி ஏரியில் இருந்து சென்னை குடிநீர் வாரியத்துக்கு தண்ணீர் திறப்பு


திருவள்ளூர்  பூண்டி ஏரியில் இருந்து சென்னை குடிநீர் வாரியத்துக்கு தண்ணீர் திறப்பு
x
தினத்தந்தி 6 Oct 2019 10:15 PM GMT (Updated: 6 Oct 2019 4:43 PM GMT)

பூண்டி ஏரியில் இருந்து சென்னை குடிநீர் வாரியத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டது.

ஊத்துக்கோட்டை,

சென்னை நகர மக்களின் பிரதான குடிநீர் ஆதாரமாக உள்ளது பூண்டி ஏரி. இந்த ஏரிக்கு கிருஷ்ணா நதி நீர் பங்கீடு ஒப்பந்தப்படி 25–ந் தேதி ஆந்திர மாநிலம் நெல்லூர் அருகே உள்ள கண்டலேறு அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த தண்ணீர் கடந்த 28–ந் தேதி நள்ளிரவு பூண்டி ஏரியை வந்தடைந்தது. கண்டலேறு அணையில் தற்போது 15 டி.எம்.சி. தண்ணீர் உள்ளது. அங்கிருந்து வினாடிக்கு 1300 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்படுகிறது.

 இந்த தண்ணீர் தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை அருகே உள்ள தாமரைகுப்பம் ஜீரோ பாயின்டிற்கு வினாடிக்கு 700 கனஅடி வீதமும், பூண்டி ஏரிக்கு வினாடிக்கு 596 கனஅடி வீதம் வந்து கொண்டிருக்கிறது.

பூண்டி ஏரியின் உயரம் 35 அடியாகும். 3231 மில்லியன் கனஅடி தண்ணீரை சேமித்து வைக்கலாம். நேற்று காலை 6 நிலவரப்படி ஏரியில் நீர் மட்டம் 24.85 அடியாக பதிவானது. 824 மில்லியன் கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளது. கண்டலேறு அணையில் இருந்து தொடர்ந்து தண்ணீர் வந்து கொண்டிருப்பதால் பூண்டி ஏரியின் நீர் மட்டம் அதிகரித்து வருகிறது.

 இதை கருத்தில் கொண்டு பூண்டி ஏரியில் இருந்து சென்னை குடிநீர் வாரியத்துக்கு நேற்று காலை பேபி கால்வாயில் தண்ணீர் திறக்கப்பட்டது. வினாடிக்கு 20 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இதனால் சென்னையில் குடிநீர் வினியோகம் சீரடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story