குழுமணி அருகே ஆலமரத்துக்கு தீ வைத்த மர்ம ஆசாமிகள்


குழுமணி அருகே ஆலமரத்துக்கு தீ வைத்த மர்ம ஆசாமிகள்
x
தினத்தந்தி 6 Oct 2019 10:45 PM GMT (Updated: 6 Oct 2019 8:19 PM GMT)

குழுமணி அருகே ஆலமரத்துக்கு மர்ம ஆசாமிகள் தீ வைத்து எரித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

ஜீயபுரம்,

குழுமணி அருகில் உள்ள மேரூர் கொடிங்கால் வாய்க்கால் கரையில் சுடுகாடு உள்ளது. இதன் அருகில் பழமைவாய்ந்த பெரிய ஆலமரம் ஒன்று இருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை அந்த வழியாக சென்ற மர்ம ஆசாமிகள் அந்த ஆலமரத்திற்கு தீ வைத்ததாக தெரிகிறது.இதில் ஆலமரம் முழுவதும் தீ வேகமாக பரவியது. இரவோடு, இரவாக அந்த மரம் முற்றிலும் எரிந்து நாசமானது. அத்துடன் அது தீப்பிடித்து எரிந்த போது, மரக்கிளைகள் முறிந்து கீழே விழுந்தன. அது அருகில் மின்கம்பத்தில் இருந்த மின் கம்பிகள் மீது விழுந்ததால், மின்கம்பிகள் அறுந்து விழுந்ததுடன், மின்கம்பமும் முறிந்து கீழே விழுந்தன.

போலீசார் விசாரணை

இதை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் சம்பந்தப்பட்ட மின்வாரிய அலுவலகத்துக்கு தகவல் கொடுத்தனர். உடனே சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த மின்வாரிய அதிகாரிகள் அந்த பகுதிக்கு செல்லும் மின் இணைப்பை துண்டித்தனர்.

ஆலமரத்துக்கு தீ வைத்த மர்ம ஆசாமிகள் யார்? எதற்காக தீ வைத்தனர்? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story