பிரதமர் மோடி-சீன அதிபர் வருகை எதிரொலி: மாமல்லபுரத்தில் சுற்றுலா பயணிகளுக்கு தடை


பிரதமர் மோடி-சீன அதிபர் வருகை எதிரொலி: மாமல்லபுரத்தில் சுற்றுலா பயணிகளுக்கு தடை
x
தினத்தந்தி 8 Oct 2019 11:15 PM GMT (Updated: 8 Oct 2019 6:38 PM GMT)

பிரதமர் மோடி-சீன அதிபர் வருகையை முன்னிட்டு மாமல்லபுரத்தில் புராதன சின்னங்களை பார்க்க சுற்றுலா பயணிகளுக்கு வருகிற 13-ந் தேதி வரை தடை விதிக்கப்பட்டுள்ளது.

மாமல்லபுரம்,

பிரதமர் நரேந்திர மோடி, சீன அதிபர் ஜின்பிங் ஆகியோர் வருகிற 11 மற்றும் 12-ந் தேதிகளில் 2 நாள் அரசு முறை பயணமாக சுற்றுலா நகரமான மாமல்லபுரம் வருகின்றனர். அங்குள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் இவர்கள் இரு நாட்டு வர்த்தகம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி முக்கிய கோப்புகளில் கையெழுத்திடுகின்றனர். அங்குள்ள புராதன சின்னங்களையும் கண்டுகளிக்கின்றனர்.

பிரதமர் மோடி, சீன அதிபர் வருகைக்காக மாமல்லபுரம் நகரம் புதுப்பொலிவுடன் தயாராகி வருகிறது. மேலும் அங்கு வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மாமல்லபுரம் நகரம் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு வளையத்தில் கொண்டுவரப்பட்டுள்ளது.

பாதுகாப்பு காரணங்களுக்காக மாமல்லபுரம் கடற்கரை கோவில், அர்ச்சுனன் தபசு, வெண்ணெய் உருண்டை கல், ஐந்துரதம், கிருஷ்ண மண்டபம், கலங்கரை விளக்கம் உள்ளிட்ட முக்கிய புராதன சின்னங்களை சுற்றுலா பயணிகள் கண்டுகளிக்க நேற்று முதல் 6 நாட்களுக்கு தொல்லியல் துறை தடை விதித்துள்ளது. வருகிற 13-ந் தேதி வரை இந்த தடை அமலில் இருக்கும்.

நேற்று விடுமுறை தினம் என்பதால் மாமல்லபுரத்தில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். ஆனால் புராதன சின்னங்களை அருகில் சென்று கண்டுகளிக்க தடை விதிக்கப்பட்டதால் அவர்கள் பெருத்த ஏமாற்றம் அடைந்தனர். பயணிகள் சிலர் கடற்கரை கோவில், ஐந்துரதம் உள்ளிட்ட புராதன சின்னங்களுக்கு அருகே முன்பகுதியில் அமைக்கப்பட்டு இருந்த கம்பிவேலிக்கு முன்புறம் இருந்து பார்த்துவிட்டு புகைப்படம், செல்பி எடுத்துவிட்டு சென்றனர்.

நகரம் முழுவதும் விழுப்புரம், காஞ்சீபுரம், திருவள்ளூர், கடலூர், வேலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மாமல்லபுரத்திற்கு வரும் வாகனங்கள் அனைத்தும் நுழைவு வாயில் பகுதியில் போலீசாரால் தீவிர சோதனை செய்யப்பட்ட பிறகே நகருக்குள் செல்ல அனுமதிக்கப்படுகிறது. மாமல்லபுரம் நகரில் உள்ள விடுதிகளில் திபெத்தியர்கள் யாராவது சட்டவிரோதமாக தங்கி உள்ளனரா? என போலீசார் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

பழைய சிற்ப கலைக்கல்லூரி சாலையில் சுற்றுலாத்துறை நிர்வாகத்தின் கீழ் உள்ள மரகதப்பூங்கா பெங்களூருவில் இருந்து கொண்டுவரப்பட்ட வண்ண மலர்கள், செடி, கொடிகள் கொண்டு அழகு படுத்தப்பட்டு வருகின்றன.

வெண்ணெய் உருண்டை கல், அர்ச்சுனன் தபசு, ஐந்துரதம் போன்ற புராதன மையங்களில் பல ஆண்டுகளுக்கு பிறகு ஜொலிக்கும் மின்விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. இதனால் இரவு நேரங்களில் அந்த சிற்பங்கள் மின்னொளியில் ஜொலிக்கின்றன.

ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ். அதிகாரிகள் கொண்ட மத்திய குழுவினர் நேற்று 4-ம் கட்டமாக பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்தனர். காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னையாவும் ஆய்வு பணியை மேற்கொண்டார்.

மோப்ப நாய்கள் மூலமும் மாமல்லபுரத்தில் உள்ள தெருக்கள் தோறும் வெடிகுண்டு சோதனை நடத்தப்பட்டு வருகிறது. மாமல்லபுரம் நகரம் முழுவதும் 300 முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

பல இடங்களில் போலீஸ் சோதனை சாவடி மையங்கள் அமைக்கப்பட்டு கண்காணிப்பு கேமரா காட்சிகளை கண்காணிப்பதற்காக 24 மணி நேரமும் தனி போலீசார் நியமிக்கப்பட்டு பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

Next Story