தஞ்சை பெரியகோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கோபுரங்களில் சிதிலமடைந்த சிற்பங்கள் சீரமைப்பு


தஞ்சை பெரியகோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கோபுரங்களில் சிதிலமடைந்த சிற்பங்கள் சீரமைப்பு
x
தினத்தந்தி 8 Oct 2019 11:00 PM GMT (Updated: 8 Oct 2019 6:42 PM GMT)

தஞ்சை பெரியகோவில் கும்பாபிஷேகத்தையொட்டி பெரியநாயகி அம்மன், முருகன், விநாயகர், சன்னதி கோபுரங்களில் சிதிலமடைந்த சிற்பங்கள் சுதை வேலைப்பாடுகளுடன் சீரமைக்கப்பட உள்ளது. இந்த கோபுரங்களில் ரசாயன கலவை மூலம் சுத்தம் செய்யும் பணியும் நடக்கிறது.

தஞ்சாவூர்,

உலக பிரசித்திப்பெற்ற கோவில்களில் ஒன்றான தஞ்சை பெரிய கோவில் கட்டிடக்கலைக்கு எடுத்துக்காட்டாக திகழ்வதோடு உலக பாரம்பரிய சின்னமாகவும் விளங்கி வருகிறது. தமிழகம் மட்டும் அல்லாது இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் தினமும் ஏராளமான பக்தர்கள், சுற்றுலா பயணிகள் பெரிய கோவிலுக்கு வந்த வண்ணம் உள்ளனர்.

கோவில் பிரகாரத்தில் பெருவுடையார், பெரியநாயகி அம்மன், வராகி அம்மன், விநாயகர், கருவூரார், முருகன், தட்சிணாமூர்த்தி, நடராஜர் சன்னதி என பல்வேறு சன்னதிகள் தனித்தனியே அமைந்துள்ளன. மத்திய அரசின் தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள பெரிய கோவில் கும்பாபிஷேகம் விரைவில் நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு கோவிலில் திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன.

முதல் கட்டமாக கேரளாந்தகன் கோபுரம், ராஜராஜன்கோபுரம் ஆகியவை ரசாயன கலவை மூலம் சுத்தம் செய்யப்பட்டது. கோவிலின் வடக்கு பகுதியில் உள்ள திருச்சுற்று மாளிகை சீர் செய்யப்பட்டது. அந்த பகுதியில் இருந்த சிவலிங்கங்களை யாரும் தொடாத வகையில் தடுப்புக்கட்டைகள் மற்றும் கதவுகள் சீரமைக்கப்பட்டன.

கோவில் வளாகத்தில் ஆங்காங்கே கருங்கற்கள் தளம் பதிக்கும் பணி நடைபெற்றது. விமான கோபுரத்தின் தென்பகுதியில் சேதமடைந்த செங்கல்தளம் பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டது. அதேபோல விமான கோபுரத்தின் வடக்கு பகுதியிலும் சேதமடைந்த தரைதளம் சீரமைக்கப்பட உள்ளது. இதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளன.

இந்த நிலையில் தற்போது பெருவுடையார் சன்னதி உள்ள விமான கோபுரம் ரசாயன கலவை மூலம் சுத்தம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இதன் அடுத்த கட்டமாக பெரியநாயகி அம்மன் சன்னதி, விநாயகர் சன்னதி, முருகன் சன்னதியில் உள்ள கோபுரங்கள் ரசாயன கலவை மூலம் சுத்தம் செய்யப்பட உள்ளது. இதற்காக முருகன் சன்னதியில் சாரம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

தஞ்சை கேரளாந்தகன் கோபுரத்தில் இருந்து ராஜராஜன்கோபுரம் வரையில் நடை பாதையில் கருங்கற்கள் தளத்தை சீரமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. சன்னதிகளில் கோபுரங்களில் சிதிலமடைந்த சிற்பங்களை சுதைவேலைப்பாடுகளுடன் சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த பணிகள் அனைத்தும் இன்னும் சில வாரங்களில் தொடங்கப்படும் என தெரிகிறது. பணிகள் அனைத்தையும் 2 மாதங்களில் முடிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

Next Story