எதிர்க்கட்சிகளை குறைகூறி காலத்தை கடத்துகின்றனர் - ரங்கசாமி குற்றச்சாட்டு


எதிர்க்கட்சிகளை குறைகூறி காலத்தை கடத்துகின்றனர் - ரங்கசாமி குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 8 Oct 2019 11:15 PM GMT (Updated: 8 Oct 2019 7:19 PM GMT)

எதிர்க்கட்சிகளை குறைகூறி காலத்தை கடத்துகின்றனர் என்று ரங்கசாமி குற்றஞ்சாட்டினார்.

புதுச்சேரி,

காமராஜ் நகர் தொகுதியில் போட்டியிடும் என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் புவனேஸ்வரனை ஆதரித்து ஞானப்பிரகாசம் நகரில் என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி வீடுவீடாக சென்று வாக்குசேகரித்தார். அப்போது கோகுலகிருஷ்ணன் எம்.பி., அ.தி.மு.க. சட்டமன்ற கட்சி தலைவர் அன்பழகன் எம்.எல்.ஏ., வையாபுரி மணிகண்டன் எம்.எல்.ஏ., என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ. டி.பி.ஆர்.செல்வம், முன்னாள் சபாநாயகர் சபாபதி, முன்னாள் அமைச்சர்கள் ராஜவேலு, தியாகராஜன், பன்னீர்செல்வம், பொதுச்செயலாளர் பாலன் ஆகியோர் உடனிருந்தனர்.

பிரசாரத்தின்போது ரங்கசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

புதுவை அரசுக்கு இப்போதுள்ள அதிகாரம்தான் நாங்கள் ஆட்சியில் இருந்தபோதும் இருந்தது. அதை வைத்துக்கொண்டுதான் மக்களுக்கான திட்டங்களை நிறைவேற்றினோம். கடைசி நேரத்தில்கூட வாக்குறுதியை நிறைவேற்றுவதற்காக இலவச மிக்சி, கிரைண்டர் வழங்கினோம். சிலரிடம் வாக்குகேட்கும்போது, உங்களால்தான் எங்கள் பிள்ளை டாக்டர் ஆனார்கள் என்று மகிழ்ச்சியுடன் தெரிவிக்கின்றனர்.

இந்த ஆட்சியில் புதிதாக என்ன திட்டத்தை கொண்டு வந்துள்ளார்கள்? தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றைக்கூட நிறைவேற்றவில்லை. எதிர்க்கட்சிகள்தான் வழக்கமாக ஆளும் கட்சியை குறை சொல்லும். ஆனால் புதுவையில் ஆட்சியாளர்கள் எதிர்க்கட்சிகளை குறைகூறி காலத்தை கடத்தி வருகின்றனர். மக்களைப்பற்றி சிந்தித்து மக்களுக்கான திட்டங்களை நிறைவேற்றுவதுதான் ஆட்சியாளர்களின் வேலை.

ஆனால் அந்த வேலையை இவர்கள் செய்வதில்லை. இந்த ஆட்சி எப்போது மாறும் என்பதே மக்களின் எண்ணமாக உள்ளது. மக்களுக்கு தேவையானதை செய்யாமல் எதிர்க்கட்சிகளை குறை சொல்வதை ஆளுங்கட்சியினர் நிறுத்திக்கொள்ள வேண்டும்.

தேர்தல் வந்தால் மக்களை சந்திப்பதுதான் தலைவர்களின் வேலை. அதைத்தான் நாங்கள் செய்துகொண்டுள்ளோம். மக்களிடம் குறைகேட்டு அரசுத்துறை அதிகாரிகளிடம் பேசி செய்ய வேண்டியதை நாங்கள் செய்துதான் வருகிறோம்.

இவ்வாறு ரங்கசாமி கூறினார்.

Next Story