பள்ளிக்கரணையில் தாயின் கழுத்தை அறுத்து கொலை செய்த மகன்; தானும் கத்தியால் குத்தி தற்கொலைக்கு முயற்சி


பள்ளிக்கரணையில் தாயின் கழுத்தை அறுத்து கொலை செய்த மகன்; தானும் கத்தியால் குத்தி தற்கொலைக்கு முயற்சி
x
தினத்தந்தி 9 Oct 2019 11:15 PM GMT (Updated: 9 Oct 2019 4:23 PM GMT)

பெற்ற தாயின் கழுத்தை அறுத்து கொலை செய்த மகன், தானும் தற்கொலை செய்ய கத்தியால் வயிற்றில் குத்திக்கொண்டார். ஆனால் வயிற்றிலேயே கத்தி மாட்டிக்கொண்டதால் வலியால் அலறி துடித்த அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

ஆலந்தூர்,

சென்னையை அடுத்த பள்ளிக்கரணை சாய்கணேஷ் நகரை சேர்ந்தவர் சரஸ்வதி(வயது 72). இவருடைய கணவர் பாலகிருஷ்ணன் (78). கடந்த 2 வாரங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். இதனால் தனது மகன் எத்திராஜ் என்ற ரமேஷ்(42) என்பவருடன் வசித்து வந்தார்.

எத்திராஜ், மனநிலை பாதிக் கப்பட்டவர் என்று கூறப்படுகிறது. இதனால் அவருடைய மனைவி, எத்திராஜை விட்டு பிரிந்து தனியாக சென்று விட்டதாக தெரிகிறது.

தந்தை இறந்துவிட்டநிலையில் தாய் சரஸ்வதிக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்ததால் மனம் உடைந்த எத்திராஜ், “நாம் வாழ வேண்டாம். தற்கொலை செய்து கொள்ளலாம்” என்று தாயிடம் கூறி வந்துள்ளார்.

இந்தநிலையில் நேற்று காலை எத்திராஜ், பெற்ற தாய் என்றும் பாராமல் சரஸ்வதியின் கழுத்தை கத்தியால் அறுத்து கொலை செய்தார். இதில் அவர், அதே இடத்தில் ரத்த வெள்ளத்தில் பிணமானார். பின்னர் எத்திராஜ், தானும் தற்கொலை செய்து கொள்வதற்காக கத்தியால் வயிற்றில் குத்திக்கொண்டார்.

ஆனால் வயிற்றில் குத்திய கத்தி, வயிற்றிலேயே மாட்டிக்கொண்டதால் வலியால் அலறி துடித்தார். சத்தம்கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர், வீட்டில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் சரஸ்வதி பிணமாகி கிடப்பதையும், வயிற்றில் கத்தி பாய்ந்த நிலையில் எத்திராஜ் அலறி துடிப்பதையும் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இது குறித்து பள்ளிக்கரணை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்துவந்த போலீசார், வயிற்றில் கத்தியுடன் உயிருக்கு போராடிய எத்திராஜை மீட்டு ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

மேலும் கொலையான சரஸ்வதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து சரஸ்வதி கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

பெற்ற தாயை மகனே கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Next Story