தாளவாடி அருகே டிராக்டர் மீது மொபட் மோதல்; தொழிலாளி சாவு


தாளவாடி அருகே டிராக்டர் மீது மொபட் மோதல்; தொழிலாளி சாவு
x
தினத்தந்தி 9 Oct 2019 10:15 PM GMT (Updated: 9 Oct 2019 6:31 PM GMT)

தாளவாடி அருகே டிராக்டர் மீது மொபட் மோதிய விபத்தில் தொழிலாளி இறந்தார். அவருடைய மருமகன் காயம் அடைந்தார்.

தாளவாடி,

தாளவாடி அருகே உள்ள அருள்வாடி கிராமத்தை சேர்ந்தவர் சித்தராஜ் (வயது 36). இவர் தனியார் கியாஸ் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இவருடைய மாமா மாதேவன் (52). கூலித்தொழிலாளி. இவர்கள் 2 பேரும் நேற்று முன்தினம் இரவு தாளவாடியில் இருந்து அருள்வாடிக்கு மொபட்டில் சென்று கொண்டிருந்தனர். மொபட்டை சித்தராஜ் ஓட்டினார். அவருக்கு பின்னால் மாதேவன் உட்கார்ந்திருந்தார். அருள்வாடி நால்ரோடு அருகே சென்றபோது எதிரே ஒரு வாகனம் வந்து உள்ளது. அந்த வாகனத்துக்கு வழி விடுவதற்காக மொபட்டை ரோட்டை விட்டு சித்தராஜ் இறக்கி உள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக ரோட்டோரமாக நிறுத்தப்பட்டிருந்த டிராக்டர் மீது மொபட் மோதியது.

இந்த விபத்தில் சித்தராஜ், மாதேவன் ஆகியோர் தூக்கி வீசப்பட்டனர். இதில் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே மாதேவன் பரிதாபமாக இறந்தார். காயம் அடைந்த சித்தராஜை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தாளவாடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இதுபற்றி அறிந்ததும் தாளவாடி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மாதேவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகர் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story