இடுப்பில் மறைத்து வைத்து இருந்த கத்தியை உருவும்போது வயிற்றை கிழித்ததால் வாலிபர் சாவு


இடுப்பில் மறைத்து வைத்து இருந்த கத்தியை உருவும்போது வயிற்றை கிழித்ததால் வாலிபர் சாவு
x
தினத்தந்தி 9 Oct 2019 10:45 PM GMT (Updated: 9 Oct 2019 6:43 PM GMT)

இடுப்பில் மறைத்து வைத்து இருந்த கத்தியை உருவும்போது வயிற்றை கழித்ததால் வாலிபர் பரிதாபமாக இறந்தார்.

திரு.வி.க.நகர்,

சென்னை வில்லிவாக்கத்தை சேர்ந்தவர் மனோகர்(வயது 28). லோடு ஆட்டோ டிரைவரான இவருக்கு, கடந்த ஒரு வருடத்துக்கு முன்பு அயனாவரத்தை சேர்ந்த சரிதா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது.

மனோகருக்கு குடிப்பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் இருவரும் கடந்த 2 மாதங்களாக பிரிந்து வாழ்ந்து வந்தனர்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் மனோகர் குடிபோதையில், தனது மனைவியை பார்க்க அயனாவரம் புதுநகர் 3-வது தெருவில் உள்ள சரிதா வீட்டுக்கு சென்றார். ஆனால் அவர், ஆந்திரா சென்று இருப்பதாக சரிதாவின் அக்கா லட்சுமி கூறினார்.

இதனால் ஆத்திரமடைந்த மனோகர், லட்சுமியுடன் தகராறில் ஈடுபட்டார். அவரை லட்சுமியின் தாயார் சம்பூர்ணம் கண்டித்தார். இவர்களின் சத்தம்கேட்டு வந்த அதே பகுதியை சேர்ந்த ராகவேந்திரர் (65) மற்றும் சீனிவாசன்(22) ஆகிய இருவரும் மனோகரை கண்டித்தனர். இதனால் அவர் அங்கிருந்து சென்றுவிட்டார்.

சிறிதுநேரம் கழித்து மீண்டும் அங்கு வந்த மனோகர், தன்னை கண்டித்த ராகவேந்திரரை வெட்டுவதற்காக தனது இடுப்பில் மறைத்து வைத்து இருந்த கத்தியை வெளியே எடுத்தார். இடுப்பில் இருந்து வேகமாக கத்தியை உருவியதால் அவரது இடுப்பை கத்தி பலமாக கிழித்தது.

எனினும் அவர், கத்தியால் ராகவேந்திரரையும் வெட்டினார். இதில் இருவரும் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் ரத்த வெள்ளத்தில் கிடந்த 2 பேரையும் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், மனோகர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். ராகவேந்திரர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். இதுபற்றி அயனாவரம் போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story